தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர்  தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கைலாய மேலசொக்கநாதர்  ஆலயம். மலைகளின் நடுவில் சுமார் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு இயற்கை சூழ்ந்த நிலையில் தோன்றிய சிவலிங்க வடிவம் கொண்ட ஒரு ஆலயம் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாக உள்ளது. சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களாலும் மகான்களாலும் தோற்றுவிக்கப்பட்டு வழிபட்டு வந்த தொன்மையான சிவத்தலம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகம முறைப்படி இயற்கை சூழல் அமைந்துள்ள இவ்வாலயம் சதுரகிரி வெள்ளியங்கிரி சுருளி மலைக்கு ஒப்பான மறையும் வனமும் சூழ்ந்த இயற்கை தலமாக அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் உள்ள சிவாலயம்போலவே  இக்கோயிலும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.



ராகு, கேது பரிகாரத்திற்கு சிறந்த காளஹஸ்தி போன்று அருகில் நீர்நிலையில் உடன் வாஸ்து முறைப்படி வாயு மூலையில் அமைந்துள்ளது. கிழக்கு முகம் பார்த்து சிவன் வீட்டிலிருந்து போடி நகரைப் பார்த்து அமைந்திருப்பது போல உள்ளது. இந்த ஆலயம் பாரம்பரியமிக்க ஆலயங்களில் மிகத் தொன்மையானதும் முதன்மையானதும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள மலைத் தோற்றம் பனி சூழ்ந்த கைலாய மலை போலவே காட்சி அளிப்பது இதன் தனி சிறப்பாகும்.


கண்ணகி மதுரையை எரித்த காலத்தில் உண்மைக்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட சொக்கநாதர் மதுரையில் இருந்து புலம்பெயர்ந்து இங்கு வந்து பிச்சாங்கரைபுலம் அமர்ந்து சொக்கநாதனாய் வீற்றிருக்கிறார் என்றும் ஐதீகக் கதைகளும் உண்டு. இம்மலைத் தொடரில் அம்மனாய் வீற்றிருக்கும் கண்ணகி சிலையும் இதற்குச் சான்று. சுமார் 9 ஆம் நூற்றாண்டில் இதை உணர்ந்த பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தனது மந்திரி தென்னவன் தமிழ்வேல் மூலம் இங்கு சிவனுக்கு ஆலயம் எழுப்பி துறையூர் நாடாள்வான் என்ற ஊர் தலைவரிடம் நிர்வாகமும் மானியமும் வழங்கி வந்துள்ளார் .



பாண்டிய காலத்திற்கு பின்னர் கிபி 1376 ஆம் ஆண்டு முதல் இந்த ஆலயம் போடிநாயக்கனூர் அரண்மனையை ஆண்ட நாயக்க வம்சத்தின் மூலம் புனரமைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு நிர்வகிக்கப்பட்டும் வந்துள்ளது. அக்காலம் தொட்டு இக்காலம் வரை ஐந்து தலை நாகம் ஒன்று இந்த ஆலயத்தை காவல் காத்து வந்ததுள்ளதாகவும் அந்த நாகம் தற்போதும் உள்ளதாகவும் நம்பிக்கை நிலவுகிறது.


அதற்கேற்றவாறு இந்த ஆலயத்தை சுற்றிலும் புற்றுகளால் சூழப்பட்டு காட்சியளிக்கிறது. புற்றுகளால் சூழப்பட்டுள்ளதாலும் காளஹஸ்தி போன்று வாயு மூலையில் நீர்நிலை அருகில் அமைந்த சிவாலயமாகும் உள்ளதால் சிறந்த ராகு கேது பரிகார தலமாகவும் கால சர்ப்ப,தோஷம், நாக தோஷம், திருமண தடை நீக்கும் தலமாகும் இந்த மேல சொக்கநாதர் கோயில் திகழ்கிறது.


இந்த ஆலயத்தில் உள்ள மேல சொக்கநாதர் என்று அழைக்கப்படும் இவரை தாயாய் நின்று அருளிய இந்த பாமரனை இவ்வூர் மக்கள் தந்தையாக பாவித்து சொக்கையா என்றும் அன்புடன் அழைத்து தற்போதும் வழிபட்டு வருகின்றனர். நகரைச் சுற்றியுள்ள மேலசொக்கநாதபுரம் ,கீழ சொக்கநாதபுரம், மீனாட்சிபுரம் போன்ற கிராமங்களின் பெயர்கள் இந்த கோவிலின் சிறப்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக  உள்ளது. போடிநாயக்கனூர் சேர்ந்த ஜமீன் வாரிசுகள் மூலம் இந்த கோவில் பராமரிக்கப்பட்டு தற்போதும் உள்ள ஜமீன் பாண்டி சுந்தர பாண்டியன் அவர்களால் தற்போதும் நிர்வகிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டும் வருகிறது .



இந்த கோவிலின் முக்கியத்துவமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் இங்கு அமைந்துள்ள மேல சொக்கநாதர் கோவிலுக்கும் ஓர் இணைப்பு உள்ளது என்று தற்போதும் கூறப்படுகிறது. ஒவ்வொரு அமாவாசை, பிரதோச நாட்களில் ஏராளமானோர் கலந்துகொண்டு வழிபாடு நடத்தி வருகின்றனர். அன்றைய தினங்களில் ஏராளமானோர்க்கு அன்னதானம் வழங்கப்படும். மலைகள் சூழ்ந்த மலைகளின் நடுவில் அழகிய தோற்றத்துடன் காணப்படும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.