தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனின் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபாட்டு தினங்களில் மிகவும் முக்கியமான ஒன்று தைப்பூசம். இந்த தைப்பூசம் தமிழ்நாட்டில் உள்ள அறுபடை வீடுகளில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இது மட்டும் இல்லாமல், குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்ற சொல்லுகுரிய முருகனுக்கு  தமிழ்நாடு முழுவதும், உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்படும். அதேபோல் உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களிலும் தைப்பூச தின வழிபாடு என்பது அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கொண்டாடப்படும். 

 

அறுபடை வீடுகளில் மிகவும் அதிக பக்தர்கள் வருகை புரியக்கூடிய வீடு என்றால் அது பழனி தான். குறிப்பாக கொங்கு மண்டலத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள பழனிக்கு கேரளாவில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனிக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் பாதயாத்திரையாக  நடந்து வந்து முருகனை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதில் பலர் பால் காவடி, இளநீர் காவடி, மயில் காவடி எடுத்து வந்து வழிபாடு நடத்தினால் முருகன் தங்களது வேண்டுகோளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. 

 

தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் வழிபடும் பழனி முருகன் கோவிலில், யாருக்கும் இல்லாத உரிமை எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் இருக்கிறது என்றால் அது என்ன உரிமை என தெரிந்து கொள்ள ஆர்வம் எழுகிறது அல்லவா?  சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் இருந்து ஆண்டு தோறும் தைப்பூசத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, பக்தர்கள் மாலையிட்டு பாதையாத்திரையை துவங்குவார்கள். அதில் சென்னிமலை முருகன் கோவில், ஊதியூர் வட்டமலை முருகன் கோவில்களில் வழிபாடு நடத்தி நடந்து வருவார்கள். 

 

மேலும், பழனிக்கு வரும் வழியில், தாராபுரம் கடந்ததும் இருக்கக்கூடிய அமராவதி நதி, நரிக்கல்பட்டியை  கடந்ததும் உள்ள மானூரில் உள்ள சண்முகா நதியில் புனித நீராடி இறுதியாக பழனி எல்லைக்கு வருவார்கள். அதைத் தொடர்ந்து, பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்த அவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். அதன் பின்னர் நான்கு ரத வீதிகளில் காவடியுடன் உலா வரும் பக்தர்கள் அதன் பின்னர் மலைக்கு செல்வார்கள். 


 

படிப்பாதை மூலம் மலை கோவிலுக்கு செல்வார்கள்.  அங்கு அவர்கள் வேண்டி ஏந்தி வந்த காவடிகளை நேர்த்திக்கடனாக  செலுத்திவிட்டு, உச்சிக்கால பூஜை, சாயரட்சை கட்டளை பூஜை, அன்னதானம்,  தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு பழனி தண்டாயுதபாணியை வழிபடுவார்கள்.  அதன் பின்னர் ராக்கால கட்டளை பூஜையில் கலந்து கொண்டு அவர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இதன் பின்னர்  பழனி மலைக்கோவிலில் இரவு முழுவதும் தங்கி வழிபாடு பஜனை பாடல்களை பாடி வழிபாடு நடத்துவார்கள்.மலைக்கோவிலில் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்தும் உரிமை  எடப்பாடி பக்தர்களுக்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த உரிமை கடந்த 360 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதும் ஆச்சரியாத்தில் ஆழ்த்துகிறது.  இது தைப்பூச தினமான, நாளை இரவும் இந்த நிகழ்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எடப்பாடியில் இருந்து வரும் பக்தர்கள் மற்றவரகளைப் போல் திரும்பிச் செல்லுகையில், பேருந்திலோ அல்லது, மற்ற வாகனங்களிலோ செல்லாமல், மீண்டும் எடப்பாடிக்கு நடந்தே செல்கிறார்கள் என்பதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மற்றொரு உண்மையாக உள்ளது. 

 

தமிழ்நாட்டில் பரவலாக முருகனின் பெயர்கள் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டாலும்,  அந்த பழக்கம் வடமொழி மோகத்தால் அது சற்று குறைந்து கொண்டே வருகிறாது. ஆனால் எடப்பாடி பகுதியில் அந்த வழக்கம் இன்று வரை கடைபிடிக்கபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.