மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலகலமாக தொடங்கி நடைபெற்றது. சுவாமியும் அம்மனும் தெப்பத்தில் வலம்வந்து பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளினர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


 

மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா 2025


 

உலகப் பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் தெப்பத்திருவிழா  கடந்த ஜனவரி 31ஆம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை  தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாளி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனிடையே நேற்று மதியம் சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தைப்பூதச பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.

 


கிராமத்தினருக்கு கோயில் சார்பில் மரியாதை 



 

அதிகாலை மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி விளக்குத்தூண், கீழவாசல், காமராஜர்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி மீனாட்சியம்மன் கோவிலின் உப கோவிலான மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். இதனையடுத்து அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனர். பின்னர் கிராமத்தினருக்கு கோயில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

 

தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளல்


 

இதையடுத்து தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுக்க  தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும் , அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என  ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நீர் நிரம்ப காணப்பட்ட தெப்பக்குளத்தில் சுவாமியும் அம்மனும் இருமுறை வலம்வந்த நிலையில்  சுவாமியும், அம்மனும் மைய மண்டபத்தில் எழுந்தருவாளர்கள். இவ்விழாவில் மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் செல்லத்துரை, மீனாட்சியம்மன் கோயில் துணை ஆணையர் கிருஷ்ணன், அறங்காவலர்குழு உறுப்பினர் மீனாஅன்புநிதி மற்றும் இந்து அறிநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் இரவு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி இரவு தெப்பத்தை ஒரு முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்.

 

அவுதா தொட்டி வாகனத்தில் எழுந்தருளுவார்


 

இந்த தெப்ப உற்சவத்தின்போது மட்டும் தான் சுவாமியும், அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினாலும் கூட சுவாமியை விட அம்மன் கூடுதலாக ஒரு வாகனமான அவுதா தொட்டி வாகனத்தில் எழுந்தருளுவார் என்பது கூடுதல் சிறப்பு. தெப்பகுளத்தில் நீர்நிரம்பி இருப்பதால் தெப்பத்திலும் தீயணைப்புத்துறையினர், காவல் துறையினர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டனர் பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாநகர காவல் ஆணையர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.