அழகர்கோவிலில் இனி நாள்தோறும் சாப்பாடு.. பக்தர்களுக்கு குட் நியூஸ்

வெளியூர் பக்தர்கள் பலரும் அன்னதானத்தில் கலந்துகொண்டனர். நாள் முழுவதும் வழங்கப்படவுள்ள அன்னதான திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

Continues below advertisement
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை மாவட்டம் அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம் மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்துள்ளார்.
 
திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்
 
திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமானது ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போதைய அரசு பொறுப்பேற்றபின், அத்திட்டத்தினை விரிவுப்படுத்திடும் வகையில் 16.09.2021 அன்று திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களிலும், 31.12.2022 அன்று இராமேசுவரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களிலும், 22.01.2024 அன்று திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்கள், என கூடுதலாக 9 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
 
உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ்
 
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 760 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக 110 கோடி ரூபாய் செலவிடப்படுவதோடு, ஆண்டுதோறும் சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்கள் பயன்பெற்று வருதாக சொல்லப்படுகிறது.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழை (BHOG) 523 திருக்கோயில்கள் பெற்று, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும்  திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக  அழகர்கோவிலிலும் திட்டம் தொடங்கியது வரவேற்பை பெற்றுள்ளது.
 
காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
 
உலகப் பிரசித்தி பெற்ற கள்ளழகர் திருக்கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் உணவருந்தும் வகையில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தை தமிழக முதல்வர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். மதுரை அழகர் கோவில் அன்னதான கூடத்தில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்களுக்கு வழங்கக்கூடிய அன்னதானத்தினை தொடங்கி வைத்து அமைச்சர் மூர்த்தி, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். வெளியூர் பக்தர்கள் பலரும் அன்னதானத்தில் கலந்துகொண்டனர். நாள் முழுவதும் வழங்கப்படவுள்ள அன்னதான திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
 
அமைச்சர் பேட்டி
 
மேலும் அன்னதானம் திட்டம் குறித்து அமைச்சர் பி.மூர்த்தி,” தமிழக முதல்வர் எதை செய்தாலும் மக்களுக்கு பயன் தரக்கூடிய திட்டங்களை தான் செய்வார். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோயில்களிலும் குடமுழுக்கு விழா மற்றும் அன்னதானத் திட்டங்களை செய்து வருகிறார். நிச்சயமாக அனைத்து கோயில்களிலும் தமிழக முதலமைச்சர் அவர்கள் மக்கள் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய திட்டங்களைத் தான் சிறப்பாக செய்வார்” என்றார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola