ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அன்று ஒவ்வொரு சிவ ஆலயங்களிலும், அன்னாபிஷேக‌ விழாவானது வெகு விமரிசையாக நடைபெறும். சில சிவாலயங்களில், பௌர்ணமிக்கு முந்தைய நாளும் அன்னாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். ஐப்பசி பௌர்ணமியையொட்டி காஞ்சிபுரத்தில் பல்வேறு சிவ ஸ்தலங்களில் வெகு விமரிசையாக அன்னாபிஷேக‌ விழா நடைபெற்றது. அன்னத்தினாலும், பழ, காய்கறி வகைகளினாலும் அலங்கரிக்கப்பட்டு சடை முடி சூடி தத்ரூபமாக காட்சியளித்தார் நகரீஸ்வரர். தஞ்சாவூருக்கு அடுத்தபடியாக 5 அடி உயரமும், மிகப்பெரிய அவூடையாரும் கொண்ட மகாலிங்கேஷ்வரர் கோயிலிலும் அன்னாபிஷேக விழாவையொட்டி பக்தர்கள் முண்டியடித்து சாமி தரிசனம் மேற்கொண்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் மும்முனி கிராமத்தில், வேதவைதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாதம் அன்னாஅபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர் 

 


 

"அன்னாபிஷேக விழாவும், பக்தர்களின் நம்பிக்கையும்"

 

தமிழ் மாதங்களில் வரும் ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி சிவபெருமானுக்கு மிக விசேஷ நாளாக பார்க்கப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமியின் பொழுது சிவ ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்றைய தினம் சிவாலயங்களில் உள்ள சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேக விழாவும் நடைபெறுகிறது. அன்றைய தினம் லிங்கமாக வீற்றிருக்கும்  சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகமும், அலங்காரமும் செய்யப்படும். 

 



 

இந்த அன்னாபிஷேகம் ஆனது கோயில் நிர்வாகத்தினால் தயாரிக்கப்படும் , உணவு மூலம் செய்யப்படுவதில்லை, வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இந்த அன்னாபிஷேகம் நடைபெறுவதால், ஒவ்வொரு பக்தர்களையும் சிறிய பங்களிப்பாக இருக்க வேண்டும் என பல கோயில்களில் பக்தர்களால் கொண்டுவரப்படும் அன்னத்தை வைத்தே இந்த அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. சிவனை நேசிக்கும் பக்தர் ஒருவர் கொடுக்கும், அன்னம் இறைவனின் திருமேனியில் சாத்தப்படும் என்பது கூடுதல் சிறப்பு. இதனாலே இந்த அன்னாபிஷேக விழா நடைபெறும் பொழுது, ஏராளமான பக்தர்கள் தங்கள் வீடுகளில் செய்து வரும் உணவுப் பொருட்களை, கடவுளுக்காக அர்ப்பணிப்பார்கள்.

 



 

இறைவன் திருமேனியில் வைக்கப்பட்ட அன்னம், பக்தர்களுக்கும், நீர்நிலைகளில் உள்ள ஜீவராசிகளுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்து முறைப்படி தானங்களில் சிறந்த தானமாக அன்னதானம் எப்போதும் இருந்து வருகிறது. அதேபோல அன்னாஅபிஷேகம் நடைபெற்ற முடிந்தவுடன் அந்த அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதேபோல், ஊரில் இருக்கும் முக்கிய நதிகள் நீர்நிலைகள் விவசாய நிலங்களிலும் இந்த அன்னம், போடப்படுகிறது. அவ்வாறு போடும்போது, அடுத்த ஐப்பசி மாதம் பௌர்ணமி வரும் வரை அந்தப் பகுதி மற்றும் ஊர் மக்கள் உணவுக்கு குறை இல்லாமல், இருப்பார்கள் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.