காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் இரவு உற்சவம். வெள்ளி சந்திரப்பிரபை வாகனத்தில் திருவீதி உலா வந்த காமாட்சி அம்மன்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம் ( kanchi kamakshi temple brahmotsavam 2024 )


சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை ஒட்டி நடைபெற்ற இரண்டாம் நாள் இரவு உற்சவத்தில் வெள்ளை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லி பூ மாலை அணிந்து கொண்டு  காஞ்சிபுரம் காமாட்சி அம்பாள் வெள்ளி சந்திரப்பிரபை  வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

 

பின்னர் மேள தாளங்கள் முழங்க வேத பாராயண கோஷ்டியினர் வேதங்கள் பாடிவர காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வலம் வந்தார். ராஜ வீதிகளில் வலம் வந்த காமாட்சி அம்மனை வழிநெடுகிலும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டுச் சென்றனர்.



வெள்ளித் தேரோட்டம்:


 

பிப்.17 ஆம் தேதி தங்க சிம்ம வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் அலங்காரமாகி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கவுள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான வெள்ளித் தேரோட்டம் வரும் 23 ஆம் தேதி இரவு நடைபெறுகிறது. இதனையடுத்து விடையாற்றி உற்சவம் வரும் 26 ஆம் தேதி தொடங்கி மார்ச் 6 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு நாளன்று புஷ்பப்பல்லக்கில் அம்மன் காஞ்சிபுரத்தின் ராஜவீதிகளில் வீதியுலா வருவதோடு விழா நிறைவு பெறுகிறது. தினசரி இரவு கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேசன், செயல் அலுவலர் எஸ். சீனிவாசன் தலைமையில் கோயில் ஸ்தானீகர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.



காஞ்சி காமாட்சி 


கோவில் நகரமாக இருக்கும் காஞ்சிபுரம் நகரத்திற்கு மிக முக்கிய அடையாளமாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. காமாட்சி என்றால் கருணை நிறைந்த கண்களையுடையவள் என்றும் பொருள் உண்டு. காமாட்சி அம்மனை மனம் உருகி வேண்டினால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கை. புராண காலத்தில் பந்தகாசுரன் என்ற ஓர் அசுரன் வாழ்ந்து வந்துள்ளான். பந்தகாசுரன் பிரம்மதேவனிடம் பல்வேறு வரங்களை பெற்று சக்தி மிக்கவனாக இருந்து வந்துள்ளார். பிரம்ம தேவன் அளித்த வரங்களின் சக்தியாலும், ஆணவத்தாலும் அவன் மூவுலகங்களையும் கைப்பற்றித் தேவர்களுக்கு, பலவித துன்பங்களை உண்டாக்கி வந்தான். பந்தகாசுரனின் கொடுமைகள் நாள்தோறும் அதிகமாகி வந்ததால் இறுதியாக சிவபெருமானிடம் சென்று முறையிட்டுள்ளனர். பந்தகாசுரனை அழிக்கும் ஆற்றல் அன்னை பராசக்தி தேவிக்குதான் உள்ளது .



அன்னை பார்வதி:


சிவபெருமானின் வாக்குப்படி, அனைவரும் அன்னை பராசக்தியிடம் சென்று முறையிட்டுள்ளனர். அத்தருணம் பராசக்தி, காஞ்சிபுரத்தில் கிளி வடிவம் கொண்டு ஒரு செண்பக மரத்தில் அமர்ந்து சிவபெருமானைக் குறித்து தவம் செய்து கொண்டிருந்தாள். அங்கு சென்ற தேவர்கள் மற்றும் முனிவர்கள் அன்னை பராசக்திடம் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து முறையிட்டுள்ளனர்




கருணை உள்ளம் படைத்த அன்னை பார்வதி முனிவர்கள் மற்றும் தேவர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் இரங்கி, பந்தகாசுரனைக் கொன்று, அவர்களின் துயரத்தைத் தீர்ப்பதாக பராசக்தி தெரிவித்தார்.  பந்தகாசுரன் கயிலாயத்தில், ஒரு இருண்ட குகையினுள்ளே, ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பதை அறிந்து, அவனைக் கொல்ல அதுவே தருணம் என்று முடிவு செய்த அன்னை பராசக்தி 18 கரங்களில், பதினெட்டு வகையான ஆயுதங்களைத் தாங்கிய பைரவ ரூபிணியாக, உக்கிர உருவம் கொண்டாள். இதனை அடுத்த அசுரனை வதம் செய்தார்.