பழனி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்றைய தினம் கோவில் சுத்தம் செய்யப்பட்டு முருகப்பெருமான், வள்ளி, தெய்வானை மற்றும் துவார பாலகர்களுக்கு உச்சிக்கால பூஜையில் காப்புக்கட்டு நடைபெறுகிறது.



இதேபோல் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் பெரியநாயகி அம்மனுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது. மேலும் கோவில் வளாகத்தில் பல்வேறு பொம்மைகளை கொண்டு கொலு வைக்கப்படுகிறது. அதோடு விழாவையொட்டி தினமும் பக்தி சொற்பொழிவு, கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.


விழாவின் 9-ம் நாளான அடுத்த மாதம் 4-ந்தேதி விஜயதசமி அன்று பழனி முருகன் கோவிலில் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை ஆகியவை நடைபெறுகிறது. பின்னர் மதியம் 2.45 மணி அளவில் மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



அதைத்தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் கோதைமங்கலம் செல்கிறார். அங்கு மாலை 6 மணிக்கு வில்அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு திரும்ப வருதலும், அர்த்தசாம பூஜையும் நடைபெறுகிறது. அதையடுத்து பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.




பழனி முருகன் கோவிலில் திருவிழா காலங்களில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் நடைபெறும் போது தலா 5 நாட்கள், சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை ஆகிய திருவிழாக்களில் தலா 1 நாள் மற்றும் நவராத்திரி விழாவில் 9 நாட்கள் என மொத்தம் 21 நாட்கள் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவையொட்டி வருகிற 26-ந்தேதி முதல் அடுத்த மாதம் அக்டோபர் 4-ந்தேதி வரை 9 நாட்கள் பழனி முருகன் கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்படுகிறது என்று கோவில் நிர்வாகத்தின் சார்பாக கூறப்படுகிறது.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்