திண்டுக்கல் புனித செபஸ்தியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு 800 ஆடுகள் மற்றும் 2000 கோழிகளைக் கொண்டு  சமைக்கப்பட்ட கமகமக்கும் கறி விருந்து. ஜாதி மத பேதம் இன்றி விடிய விடிய இலட்சம் பேருக்கு நடைபெற்ற அன்னதானத்தில் மழையையும் பொருட்படுத்தாமல் உணவு அருந்திய பொதுமக்கள்.




திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் அமைந்துள்ளது முத்தழகுப்பட்டி கிராமம். இங்கு வசிக்கக்கூடிய பொதுமக்கள் பெரும்பாலானோர் மூட்டை தூக்கும் தொழிலில் ஈடுபடுபவர்களாகவும் கூலி வேலை செய்பவர்களாகவும் இருந்து வருகின்றனர். இதற்கிடையே இந்த கிராமத்தில் சுமார் 350 ஆண்டுகள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் நான்கு நாட்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது.




திருவிழாவில் முக்கிய நிகழ்வான கறிவிருந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. இதற்காக ஊரில் உள்ள பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து புனித செபஸ்தியாருக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக கோழி, ஆடுகளை தாரை தப்பட்டை மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வந்து கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மொத்தம் 800 ஆடுகள் 2000 கோடிகளை பொதுமக்கள் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இதே போல் வெங்காயம், தக்காளி, அரிசி, பச்சை மிளகாய்,கத்தரிக்காய் மிளகாய் பொடி உள்ளிட்ட சமையலுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கினர்.




தொடர்ந்து ஊர் பொதுமக்கள் அனைவரும் ஆண்கள்,பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் என பாகுபாடு இன்றி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு விடுமுறை எடுத்தும் இதே போல் பணிக்குச் செல்லும் பெரியவர்கள் பணிக்குச் செல்லாமலும் ஒரு நாள் விடுப்பு எடுத்து உணவு சமைக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய ஆடு மற்றும் கோழிகளை முதலில் பலியிட்டு அதனை சுத்தம் செய்து பின்னர் இளைஞர்கள் அதனை சமைப்பதற்கு ஏற்றார் போல் வெட்டி மொத்தமாக ஒரு பாத்திரத்தில் பிரித்து வைத்தனர். இது ஒரு புறம் நடைபெற்றுக் கொண்டிருக்க மற்றொருபுறம் பெண்கள் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் உள்ளிட்ட சமையலுக்கு தேவையான பொருட்களை நறுக்கும் பணியில் ஈடுபட்டனர்.




இப்படி ஊரை ஒன்று கூடி அன்னதானத்திற்காக ஒரு நாள் அயராது உழைத்து உணவு சமைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த பிரத்யேக அடுப்புகளில் பொதுமக்கள் காணிக்கையாக வழங்கப்பட்ட பல்லாயிரம் கிலோ அரிசி சாதம் மற்றும் இறைச்சி மற்றும் காய்கறிகளைக் கொண்டு குழம்பு தயார் செய்யப்பட்டது.  லட்சம் பேருக்கு உணவு தயார் செய்யும் பணி நடைபெற்று கோவில் அருகே அமைந்துள்ள திடலில் மாபெரும் கறிவிருந்து பொதுமக்களுக்கு தொடர்ந்து வழங்கப்பட்டது.




திண்டுக்கல்லில் லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தாலும் கூட மழையை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அமர்ந்து இந்த அன்னதானத்தில் ஆர்வமுடன் உணவருந்தி சென்றனர். முன்னதாக கோவில் வளாகத்தில் பொதுமக்கள் தாங்கள் நேர்த்தி கடனாக தங்களுடைய குழந்தைகளை ஏலத்தில் விடும் வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.