தருமபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள புகழ்பெற்ற அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் தைப்பூசத் திருவிழா கடந்த 30-ம் தேதியன்று கொடி ஏற்றத்துடன் துவங்கி 7 நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த 7 நாட்களில், ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வழிபாடுகளும் நடத்தப்பட்டது. 

 

இதில்  பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு வடம் பிடிக்கும் தேர்திருவிழா இன்று நடைபெற்றது. இதில் சிவசுப்பிரமணிய சுவாமி அலங்கரிக்கப்பட்ட தேரினை  ஆயிரக்கனக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இந்த தேர் வீதி உலாவில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு,  சாமி தரிசனம் செய்தனர்.  அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேர் வீதி உலா வரும்போது, பக்தர்கள் உப்பு, மிளகு, பொறி, முத்துக்கொட்டைகளை தேர் மீது வீசி தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தி வழிப்பட்டனர். மேலும் பெண்கள் இழுத்து வந்த முருகன் தேர் கோயில் அருகில் நிறுத்தினர். கொரோனா பேரிடர் காலம் என்பதால் கடந்த சில ஆண்டுகளாக குமாரசாமிபேட்டை சிவசுப்பிரமணியசாமி தேர் திருவிழா சிறப்பாக நடைபெறவில்லை இந்த ஆண்டு நடைபெற்ற, இந்த திருவிழாவிற்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து  ஆயிரக்கணக்கான பெண்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.



 

இந்த திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு காவல் துறையினர் ஒலிபெருக்கியின் மூலமாக பொது மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்து வந்தனர்.  மேலும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தருமபுரி மாவட்ட காவல் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த கோவில் திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்காக இந்து அறநிலைத் துறை சார்பில், பத்தாயிரம் பேருக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. தருமபுரி-ஒகேனக்கல் பிரதான சாலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக தருமபுரியில் இருந்து பென்னாகரம், ஒகேனக்கல் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் பெண்கள் இழுத்து வந்து கோயில் அருகில் நிறுத்திய தேரை, வண்ண ஒளி விளக்குகள் பொருத்தப்பட்டு கூடுதல் அலங்காரத்துடன் மாலை மீண்டும் தேரோட்டம் நடைபெறகிறது. அப்பொழுது இந்த தேரோட்டத்தில் பெண்கள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் எல்லோரும் கலந்து கொண்டு கோயில் அருகில் இருந்து தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று நிலப்பெயர்க்க உள்ளனர்.