உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

 

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படும் ஏசு பிறப்பான கிறிஸ்துமஸ் விழா கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வேளாங்கண்ணி விண்மீன் ஆலயம் அருகே உள்ள சேவியர் திடலில் சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியினை பேராலய அதிபர் இருதயராஜ் நிறைவேற்றினார்.



 

அதனை தொடர்ந்து ஏசு கிறிஸ்து பிறப்பு நற்செய்தி வாசிக்கப்பட்டு குடிலில் பிறந்த குழந்தை ஏசுவின் பாதத்தில் பாதிரியார்கள் முத்தமிட்டனர். பின்னர் குழந்தை ஏசு பிறப்பின்போது ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது தூத்துக்குடி கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரு மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.



 

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நகர் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பாதுகாப்பு, தங்கும் வசதி போன்றவை பேராலய நிர்வாகம் மாவட்ட நிர்வாகமும் இணைந்து செய்துள்ளது. கிறிஸ்துமஸ் விழாவையொட்டி நாளை காலை வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழில் சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற உள்ளன. விழாவை முன்னிட்டு வேளாங்கண்ணியில் மாவட்ட  கண்காணிப்பாளர் ஹர்சிங் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



 

மேலும் வேளாங்கண்ணிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பக்தர்கள் மாதாவை தரிசனம் செய்துவிட்டு கடலில் சென்று நீராடுவதை வழக்கமாக வைத்திருப்பதால் இரவிலும் அங்கு செல்லக்கூடும் என்ற காரணத்தால் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவண பாபு தலைமையில் தீனைப்பு மற்றும் மீட்பு துறையினர் காவல்துறையிடம் இணைந்து கடற்கரைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.