சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 26 ஆம் தேதி முக்கிய நிகழ்வான தேரோட்டமும், 27 ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெற உள்ளது 

 

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விளங்கும் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று (18.12.2023) கொடியேற்றத்துடன் துவங்கியது.

 

கோவிலில் நடராஜர் சன்னதிக்கு எதிரே உள்ள கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவ ஆச்சாரியார் மீனாட்சிநாத தீட்சிதர் கொடிமரத்தில் கொடியேற்றி வைத்து வைத்தார். இதை தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகளும் ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



 

நாளை முதல் தினந்தோறும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறும், விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 26 ஆம் தேதி  தேரோட்டம் நடைபெற உள்ளது. அன்று நடராஜர் சிவகாமசுந்தரி விநாயகர் முருகர் சண்டிகேஸ்வரர் ஆகிய ஐந்து சுவாமிகள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேரில் வைத்து நான்கு மாட வீதிகளையும் வலம் வரும் அன்று இரவு தேர் நிலைக்கு வந்தவுடன் நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து பல்வேறு அர்ச்சனைகள் நடைபெறும்.

 

வரும் 27-ம் தேதி புதன்கிழமை காலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறுகிறது. நடராஜர் சிவகாமசுந்தரி சமேதமாக ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து நடனமாடியபடியே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.

 

புகழ்பெற்ற இந்த ஆருத்ரா தரிசன விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் கோயில் விழாவிற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.