ஜோதிடத்தில் இருக்கும் நட்சத்திரங்களில் இர்ண்டு நட்சத்திரங்கள் மட்டுமே திரு என தொடங்கும். ஒன்று பெருமாளுக்கு உகந்த திருவோண நட்சத்திரம் மற்றொன்று சிவபெருமாளுக்கு உரிய திருவாதிரை நட்சத்திரம். ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரம் வந்தாலும், மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நட்சத்திரம் கூடுதல் சிறப்பாகும்.


ஆருத்ரா தரிசனம்:


சிவாலயங்களில் மார்கழி மாதம் திருவாதிரை  நட்சத்திரத்தை முன்னிட்டு 10 நாட்கள் கொண்டாடப்படும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் சிவபெருமானின் தாண்டவ கோலத்தை தரிசிப்பதே ஆருத்ரா தரிசனம் ஆகும். 2023 ஆம் ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் நாளை அனுசரிக்கப்படுகிறது. வழக்கமாக சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். இதற்காக டிசம்பர் 18 ஆம் தேதி சிதம்பரம் நடாராஜர் கோயிலில் கொடி விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பலரும் தேர் முன் மா-கோலம் போட்டு பக்தியை வெளிப்படுத்தினர்.


இந்த ஆண்டு மார்கழி மாத பௌர்ணமி டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்கி நாளை காலை முடிவடைகிறது. ஆனால் திருவாதிரை நட்சத்திரம் நாளை முழுவதும் உள்ளது. இதனால் நாளை ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.


விரதம் இருக்கும் முறை:


ஆருத்ரா தரிசனத்தன்று விரதம் இருப்பது திருவாதிரை நோன்பு என அழைக்கப்படும். அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்தால் கணவரின் ஆயுட்காலம் நீண்டு இருக்கும் என்பது ஐதீகம். திருவாதிரை அன்று விரதம் இருக்கும் பெண்கள் அதிகாலையில் எழுந்து தலைக்குளித்துவிட்டு விரதத்தை தொடங்கலாம்.


விரதம் இருப்பவர்கள், நாளை சிவாலயங்களில் நடைபெறும் புஜைகளில் கலந்துக்கொள்ளலாம். அப்படி கலந்துக் கொள்ள முடியாதவர்கள் அதிகாலை நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்யலாம். அன்று மிக முக்கியமாக திருவாதிரை களி சிவபெருமானுக்கு நைவேத்தியமாக படைத்து, 18 வகை காய்கறிகள் சேர்த்து சாம்பார் வைக்க வேண்டும். பின்னர் 6 மணிக்கு தீபம் ஏற்றி முப்பெரும் தேவியரை வணங்கி படையல் போட்டு சிவபெருமானை வணங்கிவிட்டு அதை கணவருக்கு சாப்பிட கொடுக்க வேண்டும். மேலும் அன்றைய தினம் யாருக்காவது உணவு அளிக்க வேண்டும்.  திருவாதிரை நோன்பு இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது ஐதீகம்.


திருவாதிரை களி செய்யும் முறை:


ஒரு கப் பச்சரிசியை நன்கு கழுவிய பின் அதனை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வருக்க வேண்டும். ஒரு பங்கு அரிசிக்கு ¼ கப் பாசிப்பருப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். பாசிப்பருப்பு பொன்னிறமாகமாக வறுத்த பின் இரண்டையும் நன்கு ஆறவைக்க வேண்டும். பின் இதனை மிக்ஸியில் மையாக அரைத்து விடாமல் சற்று கொரகொரவென அரைக்க வேண்டும். அதேபோல் 1 ½  கப் வெல்லம் எடுத்து  3 கப் தண்ணீரை (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் )சேர்த்து கரைத்துக் கொள்ள வேண்டும். வெல்லம் கரைந்த பின் வடிகட்டியது, மீண்டும் அதனை அடிகனமான பாத்திரத்தில் வைத்து, அதில் அரைத்து வைத்த அரிசி கலவையை சேர்த்து இடைவிடாமல் கிளற வேண்டும். களி பதம் வந்தபின் ஏலக்காய் தூள், ஒரு சிட்டிகை உப்பு, நெய்யில் வருத்த முந்திரி பருப்பை சேர்த்து கிளறினால் சூடான சுவையான திருவாதிரை களி ரெடி.