ஜோஹோ (zoho) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு தன்னையும், ஆட்டிசம் குறைபாடு உள்ள தனது மகனையும் நிர்கதியாக விட்டு சென்றுவிட்டதாக அவரது மனைவி பிரமிளா குற்றம் சாட்டியுள்ளார். 


இதுகுறித்து அவரது மனைவி பிரமிளா ஃபோர்ப்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “ நானும் எனது கணவர் ஸ்ரீதன் வேம்பும் 29 ஆண்டுகளாக ஒன்றாக வசித்து வந்தோம். கடந்த 2019 ம் ஆண்டுக்கு பிறகு கலிபோர்னியாவில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஸ்ரீதர், என்னையும், மகனையும் நிர்கதியாக விட்டுவிட்டார். என் மகனுக்கு ஆட்டிசம் சென்ற பாதிப்பும், உடல் ரீதியாக சில பாதிப்புகள் உள்ளது. 


ஸ்ரீதர் இது தெரிந்தும் எங்களை கவனிக்கவில்லை. கலிபோர்னியாவில் என்னுடன் வாழ்ந்த காலத்திலேயே ஜோஹோ நிறுவனத்தில் அவர் பெயரில் இருந்த பங்குகள் மற்றும் அறிவுசார் சொத்துகளை தனக்கு தெரியாமலேயே அவரது சகோதரி, சகோதரியின் கணவர் பெயருக்கு வேம்பு மாற்றி விட்டார். “ என தெரிவித்தார். 


தொடர்ந்து பிரமிளா வழங்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதாடியபோது, “ கலிபோர்னியா சட்டத்தின்படி மனைவியின் ஒப்புதல் இல்லாமல் கணவர், சொத்துகளை விற்க முடியாது. வேம்பு தனது உறவினர்கள் பெயர்களில் சொத்துகளை மாற்றியது சட்டவிரோதம்” என தெரிவித்தனர்.


இதுகுறித்து ஃபோர்ப்ஸ் நிறுவனத்திற்கு பேசிய ஸ்ரீதர் வேம்பு, “  நான் எனது பங்குகளை யாருக்கும் மாற்றவில்லை. என் நிறுவனங்களின் மீதான எனது நிதி ஆர்வம் எப்போதும் குறையவில்லை. கிராமப்புற மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சிக்காக என்னை இந்தியாவிற்கு வந்தேன். அப்போது பிரமிளாவை தமிழ்நாடு வர சொன்னேன். அவர் மர மறுத்துவிட்டார். என் மகனும் என் மனைவியுடன் அங்கே இருக்கிறார். நான் அவர்களை ஒருபோதும் கைவிடவில்லை. பணரீதியாகவும் அவர்களுக்கு உதவிகள் செய்யாமலும் இல்லை” என தெரிவித்தார். 


யார் இந்த ஸ்ரீதர்..? 


ஜோஹோ (zoho) நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு கடந்த 1968 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் பிறந்தார்.  கடந்த 1989 ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸில் பொறியியல் படிப்பை முடித்த ஸ்ரீதர் வேம்பு, அமெரிக்கா சென்றார். நியூ ஜெர்சியின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, கடந்த 1996ல் வேம்பு தனது சகோதரர்களுடன் இணைந்து அட்வென்ட்நெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனம்தான் கடந்த 2009 ஆம் ஆண்டில், ஜோஹோ கார்ப்பரேஷன் என்று மாற்றப்பட்டது. 2019 இல், வேம்பு நிரந்தரமாக இந்தியாவிற்கு திரும்பி தமிழ்நாட்டில் வசிக்க தொடங்கினார். 


தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீதர் வேம்பு கிராமப்புற கல்வித் துறையில் பள்ளி வழியாக குழந்தைகளுக்கு இலவச ஆரம்பக் கல்வியை வழங்க திட்டமிட்டார்.  2005 ஆம் ஆண்டில், அவர் Zoho பள்ளியைத் திறந்தார். ஜோஹோவில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் இந்தப் பள்ளியின் மாணவர்கள். எந்த தொழில்நுட்பக் கல்வியும் இல்லாதவர்களை சாப்ட்வேர் இன்ஜினியர்களாக மாற்றுவதற்கு ஜோஹோ பள்ளி பயிற்சி அளித்தது.


ஜோஹோ பள்ளி ஆரம்ப காலக்கட்டத்தில் இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஆறு குழந்தைகளுடன் தொடங்கப்பட்டது. இன்று 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் 90 சதவீதம் மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். தென்காசியில் உள்ள இந்த பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகையாக 10000 ரூபாய் வழங்கப்படுகிறது. இப்பள்ளியில் சேர்க்கை என்பது மதிப்பெண்கள் அல்லது மதிப்பெண்களின் அடிப்படையில் அல்ல, மாறாக தனிநபரின் திறனைப் பொறுத்து வழங்கப்படுகிறது. 


கடந்த நிதியாண்டில், ஜோஹோவின் செயல்பாட்டு வருவாய் ரூ.5,230 கோடியிலிருந்து ரூ.6,711 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இந்நிறுவனம் ரூ.1918 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதில் 12000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளனர்.