Just In





Kash Patel: அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர்.. காஷ் படேல் விடுத்துள்ள எச்சரிக்கை பற்றி தெரியுமா.?
குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க உளவுத்துறை இயக்குனராகியுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் விடுத்த ஒரு முக்கியமான எச்சரிக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா.?

அமெரிக்க உளவுத்துறையின் இயக்குனராக இந்தியாவின் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட காஷ் படேல் நியமிக்கப்பட்டுள்ளார். FBI இயக்குனரான கையோடு, அவர் ஒரு முக்கியமான எச்சரிக்கையையும் தனது எக்ஸ் தள பதிவின் வாயிலாக விடுத்துள்ளார். அது குறித்து பார்க்கலாம்.
அமெரிக்காவில் கலக்கும் குஜராத்காரர் காஷ் படேல்
அமெரிக்க செனட் சபையில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்தியாவின் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட காஷ் படேல், அமெரிக்க உளவுத்துறையான FBI-யின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். செனட் சபையில், சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், அதிபர் ட்ரம்ப்பின் தீவிர விசுவாசி.
காஷ்யப் பிரமோத் வினோத் படேல் 1980-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி, நியூயார்க்கின் கார்டன் சிட்டியில், இந்திய குஜராத்தி தம்பதிக்கு பிறந்தார். இந்தியாவின் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்ட அவரது பெற்றோர், 1970களின் தொடக்கத்தில் கிழக்கு ஆப்பிரிக்காவின் உகாண்டாவிற்கு குடிபெயர்ந்து, பின்னர் கனடாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்கு அவர்கள் இன ஒடுக்குமுறையை எதிர்கொண்டதால், அங்கிருந்து வெளியேறி, அமெரிக்காவில் தஞ்சமடைந்தனர். அவரது தந்தை ஒரு விமான நிறுவனத்தில் நிதி அதிகாரியாக பணியாற்றினார். காஷ் படேல், லாங் தீவில் உள்ள கார்டன் சிட்டி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், பேஸ் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்று, கூட்டாட்சி வழக்கறிஞராக பணியாற்றினார்.
அமெரிக்காவில், 2016 அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததை காஷ் படேல் கண்டுபிடித்தார். இந்த தகவலை சிஐஏ, எஃப்பிஐ, என்எஸ்ஏ ஆகியவை உறுதி செய்ததையடுத்து, ட்ரம்ப்பின் கவனம் அவர் மீது திரும்பியது. இந்நிலையில்தான், காஷின் திறமைக்கு, தற்போது FBI-யின் இயக்குனராகும் பரிசு கிடைத்துள்ளது.
காஷ் படேல் எச்சரிக்கைப் பதிவு
இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள காஷ் படேல், FBI-ன் 9-வது இயக்குனராக நியமிக்கப்பட்டதில் பெருமை அடைவதாக தெரிவித்துள்ளார்.
”என் மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும், அதிபர் ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரல் போண்டிக்கும் நன்றி” எனவும் காஷ் குறிப்பிட்டுள்ளார்.
9/11 தாக்குதலிலிருந்து தேசத்தை காத்தது உள்ளிட்ட அடுக்கு மரபை கொண்டுள்ளதாகவும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டு, நீதி வழங்குவதில் உறுதித் தன்மை கொண்ட உளவுத்துறை மக்களுக்கு தேவையான ஒன்று என்றும் கூறியுள்ளார்.
இயக்குனராக அவரது பணி தெளிவாக உள்ளதாகவும், நல்ல காவலர்கள் காவலர்களாக இருந்து எஃப்பிஐ மீதான நம்பிக்கையை வளர்க்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அமெரிக்க மக்கள் பெருமை கொள்ளும் அளவிற்கு, எஃப்பிஐ-யில் உள்ளோருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ”அமெரிக்காவிற்கு தீங்கு நினைப்போர் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுங்கள், நீங்கள் இந்த கிரகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவீர்கள்” என்று கூறியுள்ளார் காஷ் படேல்.
இதையும் படியுங்கள்: 'Humanity Needs To Renew The Human Spirit': Watch ABP Network Chief Editor Atideb Sarkar's Full Speech