Trump Warned of Iran: “ஈரான தாக்குறது அவ்ளோ ஈசி இல்ல“; ட்ரம்ப்புக்கு வார்னிங் கொடுத்தது யார்.? அங்கதான் ட்விஸ்ட்
வெனிசுலாவைப் போல் ஈரானை தாக்குவது அவ்வளவு எளிதான கரியம் இல்லை என்று, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு வார்னிங் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையை கொடுத்தது யார் என்பது தான் இங்கே ட்விஸ்ட். அது யார்.?

ஈரான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக பூச்சாண்டி காட்டிவரும் அமெரிக்கா, மத்திய கிழக்கில் தனது படைகளை குவித்து வந்தாலும், ஈரானை தாக்குவது குறித்து உடனடியாக ட்ரம்ப் எந்த முடிவையும் இன்னும் எடுக்கவில்லை. அதற்கு காரணம் இருக்கிறது. ஆம், அவருக்கு சென்ற வார்னிங் தான் அதற்கு காரணம். அந்த வார்னிங்கை யார் கொடுத்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். அது குறித்து இப்போது பார்க்கலாம்.
அமெரிக்கா-ஈரான் இடையே இழுபறியில் இருக்கும் பேச்சுவார்த்தை
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை கட்டுப்படுத்தும் விதமாக, தங்களுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அழுத்தம் மட்டுமல்லாமல், ராணுவ தாக்குதல் குறித்த எச்சரிக்கையையும் விடுத்து வருகிறார்.
இதனிடையே, அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஓமனில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இரண்டாம் கட்டமாக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்தையில் மறைமுகமாக பங்கேற்க உள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனாலும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக், ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியிருந்தார்.
இந்நிலையில், வரும் 26-ம் தேதி, அதாவது நாளை மறுநாள், 3-ம் கட்டமாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா மற்றும் ஈரான் முடிவு செய்துள்ளன. அந்த பேச்சுவார்த்தையும் ஜெனீவாவில் தான் நடைபெற உள்ளது.
ஈரான் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு வார்னிங்
ஒருபுறம் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், மத்திய கிழக்கில் தனது படைகளை பெருமளவில் குவித்துள்ளது அமெரிக்கா. எந்த நேரத்திலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் பரவியதால், அங்கு பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகிறது.
அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்களான யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் மற்றும் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் மற்றும் ஏராளமான போர் விமானங்களும், ஆயுதங்களும் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஈரானுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்த போதிலும், ட்ரம்ப் இன்னும் தாக்குதல் முடிவை எடுக்கவில்லை. அதற்கு காரணம், ஈரானின் ராணுவ பலம் குறித்து அவருக்கு சென்ற வார்னிங் தான் என்று கூறப்படுகிறது. அதிலும், அந்த எச்சரிக்கையை விடுத்தது யார் என்பதுதான் இன்னும் சுவாரஸ்மான விஷயம்.
ட்ரம்ப்பை எச்சரித்தது யார்.?
பொதுவாக, ராணுவம் என்றாலே பயமற்றது. எதிரில் இருப்பது யாராக இருந்தாலும், பயம் என்ற ஒன்று ராணுவத்திற்கு இருக்காது. அதிலும், உலகிலேயே சக்திவாய்ந்த அமெரிக்க ராணுவம் என்றால் கேட்கவா வேண்டும்... ஆனால், அங்குதான் ட்விஸ்ட்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை எச்சரித்தது, அந்நாட்டு ராணுவமே தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆம், வெனிசுலாவைப் போல் ஈரானை தாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று, அந்நாட்டு ராணுவமும், ராணுவ ஆலோசகர்களும் ட்ரம்ப்பிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரானிடம் உள்ள ராணுவ சக்தி எந்த விதத்திலும் குறைந்தது அல்ல என்றும், தற்காப்பு அமைப்புகள் பலமாக உள்ளன என்றும், உலகின் சக்திவாய்ந்த அதிநவீன ஏவுகணைகளை ஈரான் தயாரித்து வைத்துள்ளது எனவும் ட்ரம்ப்பிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, ஈரானுக்கு பக்கபலமாக ரஷ்யா உள்ளது என்றும், ஈரான் நினைத்தால், வட கொரியா, சீனா போன்ற நாடுகளையும், வளைகுடா நாடுகளையும் தங்களுக்கு ஆதரவாக போருக்குள் கொண்டுவர முடியும் என்றும் அவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், வெனிசுலாவை எளிதாக தாக்கி அந்நாட்டு அதிபரை சிறைபிடித்தது போல், காமேனியை நெருங்குவது அவ்வளவு சுலபமல்ல என்றும் ட்ரம்பிடம் ராணுவ ஆலோசகர்கள் கூறியுள்ளனர். மேலும், ஈரானுடன் போர் தொடங்கினால், அது சில மணி நேரங்களில் முடியக்கூடியது அல்ல என்றும், நீண்ட நாட்களுக்கு தொடரும் என்றும், பிராந்திய போராக மாற வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தான், மத்திய கிழக்கில் ராணுவத்தை குவித்துள்ள போதிலும், மறுபுறம் பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டிருக்கிறார் ட்ரம்ப். 3-ம் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின், அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.























