US Iran War: இதுவாவது உண்மையா.? அடுத்த 24 மணி நேரத்தில் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்; பாக். பிரதமர் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில், அமெரிக்க - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று தெரிவித்துள்ளார்.
ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளது என்ன.?
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இதுவரை இல்லாத அளவிற்கு அமைதி ஒப்பந்தத்திற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்குள் ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும், அமைதி ஒப்பந்தத்தில் மின்னணு முறையில் கையொப்பமிடவும், அடுத்த வாரம் தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளை நடத்தவும் பாகிஸ்தான் தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதோடு, பேச்சுவார்த்தைகளின் போது தங்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பிற்காக அமெரிக்கா மற்றும் ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கு தாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். மேலும், அப்பிராந்தியத்தில் உள்ள தங்கள் சகோதரர்களின் ஆதரவிற்கும் தங்களது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம், நீடித்த அமைதிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
We are closer to a peace deal than ever before. With finalisation likely expected in the next 24 hours, Pakistan is preparing for the electronic signing of the peace deal immediately after, followed by technical level talks next week.
— Shehbaz Sharif (@CMShehbaz) June 13, 2026
We would like to thank United States of…
அமைதி ஒப்பந்தம் குறித்து பதிவிட்ட அப்பாஸ் அரக்சி
முன்னதாக, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம், நிலையற்ற போர் நிறுத்தத்தை 60 நாட்களுக்கு நீட்டிப்பதையும், மேலும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுப்பதையும் நோக்கமாகக் கொண்டு, நிறைவடையும் தருவாயில் இருப்பதாக நேற்று இரவு ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்திருந்தார்.
அது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர், "இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது. அது இறுதி செய்யப்படும் வரை, ஊடகங்கள் அதன் உள்ளடக்கங்கள் குறித்து யூகங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்," என்று கூறியிருந்தார்.
மேலும், முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் முறையாக இறுதி செய்யப்பட்டவுடன், அதன் விவரங்களை டெஹ்ரான் வெளியிடும் என்று அவர் கூறினார். "எங்களின் பொறுப்பான மற்றும் வெளிப்படையான அணுகுமுறைக்கு இணங்க, அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் பொதுமக்களுடன் பகிரப்படும்," என்று அரக்சி தெரிவித்திருந்தார்.
ஈரானிய வெளியுறவு அமைச்சரின் பதிவை மீண்டும் பகிர்ந்த ட்ரம்ப்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, டெஹ்ரானுக்கும் வாஷிங்டனுக்கும் இடையிலான ஒப்பந்தம் "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது" என்று கூறிய சமூக ஊடகப் பதிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று மறுபகிர்வு செய்ததன் மூலம், ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை உறுதி செய்தார்.
தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட அவர், பேச்சுவார்த்தைகள் ஒரு திருப்புமுனையை நெருங்கி வருவதாக ஈரானிய அரக்சி குறிப்பிட்டிருந்த பதிவின் ஸ்கிரீன்ஷாட்டை ட்ரம்ப் மறுபதிவு செய்தார். போர் நிறுத்தத்தை நீட்டிப்பதையும், அணுசக்தி பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை, இரு தரப்பினரும் எட்டுவதற்கு நெருங்கிவிட்டனர் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வரும் வேளையில், ட்ரம்ப் அந்த பதிவை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
Before You Go
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
ட்ரெண்டிங் செய்திகள்






















