துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் 3 மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார் அந்நாட்டு அதிபர் எர்டோகன்.


இது குறித்து அவர் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்காக உரையாற்றினார் அப்போது அவர் நாட்டின் தென் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட 10 மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுகிறது. 3 மாதங்களுக்கு இந்த அவசர நிலை நிலவும். காரணம் அப்போதுதான் மீட்புப் பணிகளை எந்த இடையூறும் இன்றி செயல்படுத்த முடியும். பாதிக்கப்பட்ட பகுதி வாழ் மக்களுக்கு நிதியுதவியும் செய்யப்படும் என்றார். ஆனால் எவ்வளவு நிதி உதவி என்பன போன்ற தகவல்களை அவர் பகிரவில்லை. எர்டோகம் பிறப்பிக்கும் இந்த அவசர நிலை மே 14 வரை நீடிக்கும். 20 ஆண்டுகளாக பதவியில் உள்ள எர்டோகன் அடுத்து வரும் தேர்தலில் என்ன மாதிரியான வரவேற்பை சந்திப்பார் என்பது தற்போது கேள்விக் குறியாக உள்ளது. துருக்கியில் மே மாதம் தேர்தலும் நடைபெற வேண்டியுள்ளது. இந்நிலையில்  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 மாநிலங்களில் 3 மாதங்களுக்கு அவசரநிலையை பிரகடனம் செய்துள்ளார் அதிபர் எர்டோகன். துருக்கியில் கடைசியாக கடந்த 2016ல் ஆட்சிக் கவிழ்ப்பு சதி நடந்த போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு அது அமலில் இருந்த நிலையில் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது. 






துருக்கியில் தற்போது வரை 3549 பேர் உயிரிழந்துள்ளனர். 15000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். சிரியாவில் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்த மிக மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழப்பு 20 ஆயிரத்தையும் கடந்து செல்லலாம் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 


துருக்கியில் நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு இதுவரை 4,300 மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 2வது நாளாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் இன்று பிப்ரவரி 7 ஆம் தேதி காலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. 


துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியை தாக்கிய இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து தரைமட்டமாகின. சிரியாவில் பாதிப்பு சற்றே குறைவாக இருந்தாலும், துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் மட்டுமின்றி, அந்நாட்டில் இருந்த 2,200 ஆண்டுகள் பழமையான காசியண்டெப் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும் தரைமட்டமாகின.  இந்த நிலநடுக்கத்தின் எதிரொலிது லெபனான் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. தற்போது வரை இரு நாடுகளிலும் சேர்த்து ஆயிரத்து 4000-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.