திங்கள்கிழமை அதிகாலை (பிப்ரவரி 6, 2023) துருக்கி மற்றும் சிரியாவில்  7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 4 மணியளவில் 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டது. மேலும், இரவு 7 மணி அளவில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.0வாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால்  நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் இதுவரை 2,300க்கும் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

  இந்த நிலநடுக்கம் துருக்கியின் மாகாண தலைநகரான காஸியான்டெப்பின் வடக்கே ஏற்பட்டது.  துருக்கியின் 10 மாகாணங்களில் இதுவரை 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 7,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.




நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இருந்த பகுதி தற்போது அடுக்கு மாடிகளின் குவியல்களாக மாறிவிட்டன. இந்த குவியலுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது. 


இதற்கு முன்னர் 1999 இல் வடமேற்கு துருக்கியில் ஏற்பட்ட இதேபோன்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 18,000 பேர் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 


நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு "தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன" என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 


பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்ததோடு, துருக்கிக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். . "துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் உடமைச் சேதங்களால் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். துருக்கி மக்களுக்கு இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது, இந்த துயரத்தை சமாளிக்க அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது. ,” என்று பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.




நிலநடுக்கத்தால் பாதிகப்பட்ட பெண் ஒருவர் கூறியதாவது, "நாங்கள் தொட்டில் போல் அசைந்தோம். வீட்டில் நாங்கள் ஒன்பது பேர் இருந்தோம். என்னுடைய இரண்டு மகன்கள் இன்னும் இடிபாடுகளுக்குள் இருக்கிறார்கள், அவர்களுக்காக நான் காத்திருக்கிறேன்," தியார்பாகிரில் ஏழு மாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில் மீட்கப்பட்ட பெண், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். 




அடுத்தடுத்து சக்தி வாய்ந்த இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியா சார்பில் மீட்பு பணிகளில் ஈடுபட இரண்டு பேரிடர் மீட்புக் குழு துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது.