Trump on India Deal: “இந்தியாவோட டீல் தொடரும்“ - ட்ரம்ப் உறுதி; ஆனா மறுபடியும் மோடிய வம்புக்கு இழுத்துட்டாரே.!
இறக்குமதி வரி ரத்துக்கு மத்தியில், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடரும் என ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார். ஆனால், அதை பேசிவிட்டு, மீண்டும் பிரதமர் மோடியை வம்பிழுக்கும் வேலையை செய்துள்ளார் ட்ரம்ப்.

அமெரிக்க உச்சநீதிமன்றம் நேற்று, உலக நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் விதித்த கடுமையான இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது எனக் கூறி, அதனை ரத்து செய்து உத்தரவிட்டது. இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்தியா உடனான வர்த்த ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இருக்காது, அது அப்படியே தொடரும் என்று ட்ரம்ப் கூறியுள்ளார். அதோடு, மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
“இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடரும்“
அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப் பின் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா உடனான தனது உறவு 'அருமையானது' என்றும், வாஷிங்டன் மற்றும் புதுடெல்லி இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றங்களும் இருக்காது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்தியாவுடனான தனது உறவு அற்புதமானது என்று தான் நினைப்பதாகவும், “நாங்கள் இந்தியாவுடன் வர்த்தகம் செய்கிறோம். இந்தியா ரஷ்யாவிலிருந்து வெளியேறியது. இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் பெற்று வந்தது. ஒவ்வொரு மாதமும் 25,000 பேர் இறக்கும் அந்த பயங்கரமான போரை நாங்கள் தீர்த்து வைக்க விரும்புவதால், அவர்கள் எனது வேண்டுகோளின் பேரில் பின்வாங்கினர்," என்று கூறினார்.
மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் போர் குறித்து பேசிய ட்ரம்ப்
தொடர்ந்து பேசிய ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது பிணைப்பு "சிறந்தது" என்று வலியுறுத்தினார். பின்னர், கடந்த கோடையில், வரிகளை பயன்படுத்தி இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரை நிறுத்தியதாக மீண்டும் கூறினார்.
அது குறித்து பேசிய அவர், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போரையும் நான் நிறுத்தினேன். உங்களுக்குத் தெரியும், 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அந்தப் போர் நடந்து கொண்டிருந்தது, அநேகமாக அணு ஆயுத போராக மாற இருந்தது. நேற்றுதான், பாகிஸ்தான் பிரதமர், அதிபர் ட்ரம்ப் அவர்களை(இந்தியா) நிறுத்தச் சொல்லி, 35 மில்லியன் உயிர்களை காப்பாற்றினார் என்று கூறினார்," என்று தெரிவித்தார்.
மேலும், தான் பெரும்பாலும் வரிவிதிப்புகளை வைத்து தான் இதைச் செய்தேன் என்று கூறிய அவர், “பாருங்கள், நீங்கள் சண்டையிடப் போகிறீர்கள், அது பரவாயில்லை, ஆனால் நீங்கள் அமெரிக்காவுடன் வணிகம் செய்யப் போவதில்லை. மேலும், நீங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் 200 சதவீத வரியை செலுத்தப் போகிறீர்கள்“ என்று கூறியதாகவும், பின்னர் அவர்கள் போன் செய்து, 'நாங்கள் சமாதானம் செய்துவிட்டோம்' என்று சொன்னார்கள்," என்றும் அமெரிக்க அதிபர் கூறினார்.
ட்ரம்ப் இவ்வாறு கூறுவது ஒரு தொடர்கதையாக இருக்கிறது. இந்தியா பல முறை மறுத்தும், அவர் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். இதற்கு, பிரதமர் மோடியே நேரடியாக பதில் அளித்தால் தான், இந்த விவகாரம் முடிவுக்கு வரும் போல் இருக்கிறது.























