Trump Tariff Warning: BUYER BEWARE!!! கோர்ட் தீர்ப்பு வந்தும் அடங்கலயே.! உலக நாடுகளுக்கு ட்ரம்ப்பின் புதிய எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உலக நாடுகளுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதுவும் வரிகள் தொடர்புடையதுதான். அது என்ன என்று பார்ப்போம்.

உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் சட்டவிரோதமானது என்று கூறி அதனை ரத்து செய்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில், வேறு சட்டத்தை பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கம் 10 சதவீதம் கூடுதல் வரிகளை விதித்தார் ட்ரம்ப். இந்நிலையில், இப்போது மீண்டும் ஒரு வரி எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
ட்ரம்ப்பின் புதிய எச்சரிக்கை என்ன.?
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக கடும் அதிருப்தியில் உள்ள அதிபர் ட்ரம்ப், ஏற்கனவே உலக நாடுகளுக்கு 15 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்த நிலையில், தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் ஒரு பதிவை அவர் போட்டுள்ளார்.
அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வைத்துக்கொண்டு எந்த நாடாவது தங்களுடன் விளையாட நினைத்தால், அவர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும், குறிப்பாக, அமெரிக்காவை நீண்ட காலமாக, தசாப்தங்களாக சுரண்டியவர்கள் மீது இப்போது உள்ளதை விட அதிக வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், வாங்குபவர்கள் ஜாக்கிரதை என்றும் மிரட்டியுள்ளார்.
ஏற்கனவே 15% வரிகளை விதித்துள்ள ட்ரம்ப்
உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த கடுமையான பரஸ்பர வரிகள் சட்டவிரோதமானது எனக் கூறி, அதனை ரத்து செய்து அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதைத் தொடர்ந்து, தீர்ப்பை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், இது ஒரு மோசமான தீர்ப்பு என்றம், அமெரிக்காவிற்கு எதிரான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் கூறினார்.
மேலும், அடுத்த சில மணி நேரங்களிலேயே, வேறு சட்டத்தை பயன்படுத்தி உலக நாடுகளுக்கு 10 சதவிதம் வரியை விதிப்பதாக அறிவித்தார். எனினும், அதிலும் ஆத்திரம் தீராத ட்ரம்ப், அடுத்த நாளே, ஏற்கனவே விதித்த 10 சதவீதம் எனும் வரியை, முழுமையாக அனுமதிக்கக் கூடிய மற்றும் சட்டப்படி செல்லுபடி ஆகக்கூடிய 15 சதவீத வரியாக உயர்த்துவதாக மீண்டும் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்தார்.
அதோடு, வரி நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்றும், அடுத்த சில மாதங்களில், சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவிலான, திருத்தப்பட்ட வரி நடைமுறைகளை வெளியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழலில் தான், தற்போது புதிய எச்சரிக்கையையும் ட்ரம்ப் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கிவிட்ட போதிலும் அடங்காத அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அந்த கோபத்தில் இன்னும் என்னென்ன செய்யப் போகிறாரோ என்று உலக நாடுகளிடையே கவலை எழுந்துள்ளது.























