Russia Accepts Taliban: தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
ஆப்கானிஸ்தானில் ஆட்சி புரியும் தாலிபான் அரசுக்கு இதுவரை எந்த நாடும் அங்கீகாரம் வழங்காத நிலையில், முதல் முறையாக, அந்நாட்டிற்கு ரஷ்யா அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இதனால், அந்நாட்டை பல்வேறு நாடுகளும் முறைப்படி அங்கீகரிக்காமல் இருந்தன. இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அரசை ரஷ்யா முதல் முறையாக அங்கீகரித்துள்ளது. அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.
தாலிபான் அரசை முறையாக ஏற்றுக்கொண்ட ரஷ்யா
தீவிரவாதிகளாக அறியப்பட்ட தாலிபான்களை எந்த நாடும் அங்கீகரிக்காமல் இருந்தன. இந்நிலையில், தாலிபான் அரசை ஏற்றுக்கொண்ட முதல் நாடாக ரஷ்யா மாறியுள்ளது. அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், தாலிபான் தூதரை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. அந்த விழாவின்போது, ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ, தாலிபான் தூதர் குல் ஹசனை சந்தித்து முறைப்படி சான்றுகளை பெற்றுக் கொண்டார்.
இந்த அங்கீகாரத்தை தொடர்ந்து ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஆப்கானிஸ்தானின் தூதரகத்தில், முந்தைய ஆப்கானிஸ்தான் அரசின் கொடி அகற்றப்பட்டு, தாலிபான்களின் வெள்ளைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
தாலிபான்கள் வரவேற்பு
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை தாலிபான்கள் வரவற்றுள்ளனர். "இது இருநாட்டு உறவுகளின் வரலாற்றில் ஒரு பெரிய மைல்கல்" என தலிபானின் தற்காலிக வெளியுறவுத்துறை அமைச்சர் அமீர் கான் முட்டாக்கி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தாலிபான்களை அங்கீகரித்த முதல் நாடு என்ற பெயரை ரஷ்யா பெற்றுள்ளது.
இதுதொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய எமிரேட் அரசாங்கத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் செயல், இருநாடுகள் இடையேயான உற்பத்தி, பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்'' என்று கூறப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி வந்த பிறகும், ரஷ்யா தொடர்ந்து நல்லுறவையே வைத்து வந்தது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ரஷ்யாவின் தூதரகம் உள்ளது. வர்த்தகம், விவசாயம் உள்ளிட்ட பல துறைகளில் ஒருங்கிணைப்பு குறித்த பேச்சுவார்த்தைகளில் இருநாடுகளும் ஈடுபட்டு வந்தன.
அங்கீகாரம் இல்லாமல் ஆண்டுவந்த தாலிபான் அரசு
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு முதல், தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால், தாலிபான்களை, அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகளும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளன. அதோடு, தாலிபான்கள் உள்நாட்டு போரை தொடங்கி, அதன் மூலமே ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்தனர்.
இதனால் தாலிபான் அரசுக்கு பல நாடுகள் அங்கீகாரம் வழங்கவில்லை. இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள், ஆப்கானிஸ்தானுக்கு உதவிகளை செய்தாலும், அந்நாட்டின் தாலிபான் அரசை அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில், முதல் நாடாக, ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை, ரஷ்யா அங்கீகரித்துள்ளது. எப்படி என்றால், சமீபத்தில் ரஷ்யாவுக்கான ஆப்கானிஸ்தான் தூதரகராக குல் ஹசன் என்பவர் தாலிபான் அரசால் நியமிக்கப்பட்டார். அவரை ரஷ்யா ஏற்றுக்கொண்டுள்ளது.
தாலிபான்களுக்கு ஏன் அங்கீகாரம் கிடைக்கவில்லை.?
ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு, அந்நாட்டு பெண்களுக்கு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இது பெண்களின் கல்வியறிவு உள்ளிட்டவற்றை பாதிக்கும் வகையில் உள்ளதால், அவைகளை நீக்க வேண்டும் என்று பல நாடுகளும் கோரிகை விடுத்து வருகின்றன. அதோடு, மனித உரிமைகளை தாலிபான்கள் பின்பற்ற வேண்டும் என்றும், அப்போதுதான் அங்கீகாரம் வழங்கப்படும் என்று பல நாடுகளும் தெரிவித்துள்ளன. ஆனால், தாலிபான் அரசு அதை கண்டுகொள்ளாமலேயே இருந்து வருகிறது.
இப்போது ரஷ்யா முதல் முறையாக தாலிபான்களை அங்கீகரித்துள்ளதால், இனிவரும் நாட்களில் மற்ற நாடுகளும் தாலிபான்களை அங்கீகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.





















