America Vs Iran: ஈரானை தாக்குமா அமெரிக்கா.? அணுசக்தி பேச்சுவார்த்தை என்ன ஆனது.? ஓமன் வெளியிட்ட முக்கிய தகவல்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், அது குறித்து, மத்தியஸ்தம் செய்த ஓமன் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஒருபுறம் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று எந்த முடிவும் எட்டப்படாததால், 3-ம் கட்ட பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்த நாடாக செயல்படுகிறது. இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தை குறித்து ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அது குறித்து இப்போது பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழல்
ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதை கட்டுப்படுத்தும் விதமாக, தங்களுடன் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். அழுத்தம் மட்டுமல்லாமல், ராணுவ தாக்குதல் குறித்த எச்சரிக்கையையும் விடுத்து வருகிறார். மேலும், எச்சரிக்கையோடு நிறுத்தாமல், மத்திய கிழக்கில் அதிக அளவில் படைகளையும் குவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்களான யுஎஸ்எஸ் ஆபிரஹாம் லிங்கன் மற்றும் உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட் மற்றும் ஏராளமான போர் விமானங்களும், ஆயுதங்களும், படைகளும் மத்திய கிழக்கில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால், ஈரான் மீது எந்த நேரத்திலும் அமெரிக்காவால் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் பரவியதால், அங்கு பதற்றமான சூழ்நிலையே இருந்து வருகிறது.
“அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்“
இதனிடையே, அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்த முதற்கட்ட பேச்சுவார்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், இரண்டாம் கட்டமாக, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்தையில் மறைமுகமாக பங்கேற்க உள்ளதாக ட்ரம்ப் கூறியிருந்த நிலையில், அதிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஆனாலும், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக, ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, ஜெனீவாவில் 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜெனீவாவில் அமெரிக்கா - ஈரான் இடையேயான 3-ம் கட்ட அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. இந்த பேச்சுவார்த்தைக்கு ஓமன் மத்தியஸ்த நாடாக செயல்படுகிறது. இந்நிலையில், நேற்று நடந்த பேச்சுவார்த்தை குறித்து ஓமன் வெளியுறவுத் துறை அமைச்சர் பத்ர் அல்புசைதி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையேயான அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தையில் ஆக்கப்பூர்வமான மற்றும் நேர்மறையான கருத்துகள் பரிமாறப்பட்டு வருவதாகவும், இப்போது நடைபெறும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், நல்ல முடிவு எட்டப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால், இப்போதைக்கு ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ட்ரம்ப்பின் மனநிலையை பொறுத்தே அது உள்ளது.























