வட கொரியாவின் அச்சுறுத்தலை மனதில் வைத்து, அமெரிக்கா உடன் இணைந்து அவ்வப்போது போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது தென் கொரியா. இதனால் எரிச்சலடையும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென் கொரியாவை அச்சுறுத்தும் வகையில் ஏதாவது செய்வது வழக்கம். அந்த வகையில், தற்போது தங்கள் நாட்டு அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியா - அமெரிக்கா கூட்டு ராணுவப் பயிற்சி
வட கொரியாவால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கருதும் தென் கொரியா, அமெரிக்கா உடன் இணைந்து போர் பயிற்சிகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் கூட்டுப் போர் பயிற்சியை தொடங்கியுள்ளது தென் கொரியா. இந்த பயிற்சியானது 11 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியா - அமெரிக்கா கூட்டு போர் பயிற்சியில் இந்த முறை சுமார் 21,000 வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
வட கொரிய அதிபரின் எச்சரிக்கை
தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து மேற்கொள்ளும் கூட்டு போர் பயிற்சியை, தங்களுக்கு எதிரான போர் ஒத்திகையாகவே வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் கருதுகிறார். இதனால், ஒவ்வொரு முறை இந்த போர் பயிற்சி நடைபெறும் போதும் அவர் தென் கொரியாவிற்கு எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.
அதாவது, இங்கு பயிற்சி தொடங்கினாலே, வட கொரியா ஏதாவது ஒரு ஏவுகணை சோதனையை நடத்தும். அதுவே, தென் கொரியாவிற்கான எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கூட்டு போர் பயிற்சியை கைவிடுமாறு கிம் ஜாங் உன்னும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவரது எச்சரிக்கையையும் மீறி, தென் கொரியா தற்போது கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகிறது.
கிம் ஜாங் உன் போட்ட அதிரடி உத்தரவு
இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், தலைநகர் பியாங்யாங்கில் உள்ள ராணுவ தளத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். அப்போது, அங்கு உருவாக்கப்பட்டு வரும் சோ ஹியோன் என்ற போர்க்கப்பலை அவர் பார்வையிட்டார்.
இதையடுத்து பேசிய அவர், தென் கொரியா-அமெரிக்கா நாடுகள் இடையே நடக்கும் ராணுவ பயிற்சி, போரை தூண்டுவதாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால், அணு ஆயுத உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என தங்கள் நாட்டு ராணுவத்திற்கு அவர் அதிரடி உத்தரவை போட்டுள்ளார்.
அவரது இந்த உத்தரவு, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இது ஒருபுறமிருக்க, அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வட கொரியாவிற்கு ஏற்கனவே ஐ.நா-வால் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை பொருட்படுத்தாமல், கிம் ஜாங் உன் இத்தகைய உத்தரவை போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.