மத்திய கிழக்கில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாட்டு மக்களுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு பாரசீக (Farsi) மொழியில் ஒரு முக்கியச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில், ஈரான் மக்கள் தங்களை ஆளும் 'பயங்கரவாத ஆட்சி'யிலிருந்து விடுவித்துக்கொள்ள இதுவே சரியான தருணம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கான இலக்குகள் மீது தாக்குதல்
வரவிருக்கும் நாட்களில் ஈரான் ஆட்சியின் ஆயிரக்கணக்கான பயங்கரவாத இலக்குகளை இஸ்ரேல் தாக்கும் என்று குறிப்பிட்ட நெதன்யாகு, இதன் மூலம் ஈரானிய மக்கள் கொடுங்கோல் விலங்குகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்வதற்கான சூழல் உருவாக்கப்படும் என்று கூறினார். "இந்த வாய்ப்பு ஒரு தலைமுறையில் ஒருமுறை மட்டுமே வரும், இதை நழுவவிடாதீர்கள்" என்று அவர் ஈரானிய குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.
மக்களைத் திரள வலியுறுத்தல்
ஈரான் மக்கள் சும்மா அமர்ந்திருக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், "உங்கள் வாழ்வைக் கசப்பாக்கிய பயங்கரவாத ஆட்சியைத் தூக்கியெறிய கோடிக்கணக்கான மக்கள் வீதிகளில் வெள்ளமெனத் திரண்டு பணியை முடிப்பதற்கான தருணம் நெருங்கிவிட்டது" என்று கூறினார். மக்களின் துயரமும் தியாகமும் வீண் போகாது என்றும், அவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த உதவி இப்போது வந்துவிட்டது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இனக்குழுக்களின் ஒற்றுமைக்கு அழைப்பு
ஈரானில் உள்ள பல்வேறு இனக்குழுக்களான பாரசீகர்கள், குர்துகள், அஸெரிகள், அஹ்வாஸிகள் மற்றும் பலூச்சிகள் என அனைவரையும் ஒன்றிணையுமாறு நெதன்யாகு கேட்டுக்கொண்டார். "இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து ஆட்சியைக் கவிழ்த்து, உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான நேரம் இது" என்று அவர் அந்தச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தூது
ஒரு நாட்டின் தலைவர், மற்றொரு நாட்டின் மக்கள் அந்நாட்டு அரசை வீழ்த்த வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுப்பது ராஜதந்திர ரீதியில் மிகவும் தீவிரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் நேரடிப் போராக உருவெடுத்து வரும் சூழலில், நெதன்யாகுவின் இந்த 'பாரசீக செய்தி' ஈரான் அரசுக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகப் பார்க்கப்படுகிறது.
