Trump Xi Jinping Meet: சீன அதிபரை சந்திப்பதாக அறிவிப்பு; ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை; ட்ரம்ப் கூறியது என்ன.?
ஏப்ரலில் சீன அதிபரை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்திக்க உள்ள நிலையில், ஆண்டு இறுதியில் ஷி ஜின்பிங் அமெரிக்கா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் தற்போது நல்லுறவு இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

உலக அரங்கில் இரு துருவங்களாக கருதப்படும் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்பும், சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கம் விரைவில் சந்திக்க உள்ளனர். இருவருக்கும் தற்போது நல்லுறவு இருப்பதாகவும் கூறியிருக்கிறார் ட்ரம்ப். அதேபோல், ஈரானுக்கும் அவர் மீண்டும் எச்சரிக்கை விடுப்பது போல் பேசியுள்ளார். அவரது செய்தியாளர் சந்திப்பு குறித்து இப்போது பார்க்கலாம்.
சீன அதிபருடன் ட்ரம்ப் சந்திப்பு
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஏப்ரல் மாதத்தில் தான் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டின் இறுதியில் ஜின்பிங் அமெரிக்காவிற்கு வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தனதுக்கும் ஜின்பிங்கிற்கும் இடையே நல்ல நட்பு உள்ளதாகவும், இருவருக்கும் இடையே நல்ல உறவு இருப்பது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். அதோடு, உலகின் மிகவும் சக்திவாய்ந்த இரண்டு நாடுகளுக்கு இடையே மிகச் சிறந்த உறவு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிப்ரவரி 4-ம் தேதி, சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் சுமார் 90 நிமிடங்கள் தொலைபேசி உரையாடலை நடத்திய ட்ரம்ப், வர்த்தகம், ராணுவம், தைவான், ரஷ்யா-உக்ரைன் போர், எண்ணெய் கொள்முதல் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து அவருடன் விவாதித்ததாக பின்னர் கூறியிருந்தார்.
பேச்சுவார்த்தை மிகவும் நேர்மறையாக இருந்ததாக கூறிய ட்ரம்ப், அமெரிக்காவிற்கு சீனாவிற்கும் இடையேயான உறவு மிகவும் நல்ல ஒன்று எனவும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில், ஜின்பிங் உடனான அவரது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஈரானுக்கு மீண்டும் எச்சரிக்கை
செய்தியாளர்கள் சந்திப்பில், ஈரான் விவகாரம் குறித்தும் பேசிய ட்ரம்ப், ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். அப்படி இல்லையென்றால் அது ஈரானுக்கு மிகவும் அதிர்ச்சிகரமானதாக இருக்கும் என்று கூறினார்.
மேலும், அவர்கள் ஒப்பந்தம் செய்யாமல் பிடிவாதம் பிடித்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். அதோடு, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடன் நேற்று மிகவும் சிறப்பான சந்திப்பை நடத்தியதாகவும் கூறினார். அவர்கள் இருவரும், ஈரான் ஒப்பந்தம் குறித்து விவாதித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.























