USA Iran War: 10 நிமிடங்களில் 100 ஏவுகணைகள்..! போர் நிறுத்தம், எங்ககிட்ட பேசவே இல்லை - கடுப்பாகி ஈரான் முடிவு
USA Iran War: அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு மத்தியில் 10 நிமிடங்களிலேயே 100 ஏவுகணைகளை செலுத்தி. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.

USA Iran War: ஈரான் உடனான போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா எந்த தகவலும் தெரிவிக்கவில்லை என இஸ்ரேல் கவலை தெரிவித்துள்ளது.
10 நிமிடங்களில் 100+ ஏவுகணைகள்:
ஈரான் உடன் 2 வாரங்களுக்கு இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்து 24 மணி நேரம் கூட முழுமையடைவில்லை. அதற்குள், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழி தாக்குதல் காரணமாக, ஹார்மஸ் நீர்வழிப்பாதையை மீண்டும் மூடுவதாக தெஹ்ரான் அறிவித்துள்ளது. வெறும் 10 நிமிடங்களிலேயே 100-க்கும் அதிகமான ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி லெபனானை இஸ்ரேல் திணறடித்துள்ளது. போர் நிறுத்தத்தால் சர்வதேச எரிபொருள் விநியோக சங்கிலி சீரடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இஸ்ரேலின் தாக்குதலால் வளைகுடா நாடுகளில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான் உடனான அமெரிக்காவின் போர் நிறுத்தத்திற்கு வெளிப்படையாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஆதரவளித்தாலும், அந்த ஒப்பந்தத்தில் லெபனான் அடங்காது எனவும் விளக்கமளித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு
ஈரான் முன்மொழிந்த போர் நிறுத்த ஒப்பந்ததில் நட்பு நாடுகள் மீதான தாக்குதலும் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. அதனை அமெரிக்காவும் ஏற்றதாலேயே போர் நிறுத்தத்தை ஒப்புக்கொண்டதாக தெஹ்ரான் அறிவித்தது. இந்நிலையில், லெபனான் நடத்தியுள்ள தாக்குதலில் சுமார் 250 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், 500-க்கும் அதிகமானோ காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் நடத்தும் இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவும் ஆதரவு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் இல்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதேநேரம், ஒப்பந்தப்படி ஹார்மஸ் நீர்வழிப்பாதை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்கப்பட வேண்டுமென வெள்ளை மாளிகை தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்தை விரும்பாத இஸ்ரேல்?
ஈரான் உடனான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கவில்லை என இஸ்ரேல் அதிருப்தியில் உள்ளதாம். அந்நாட்டின் கருத்தை பெறாமலேயே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜார்னல் செய்தி வெளியிட்டுள்ளது. நேதன்யாகு வெளியிட்ட சமூக வலைதள பதிவில், ”வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் பிராந்திய நட்பு நாடுகள் பகிர்ந்துகொள்ளும் இந்த இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது. இந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் கொடுத்த வார்னிங்
போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியதால், ஹார்மஸை உடனடியாக மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்ந்தால் போர் நிறுத்தத்தில் இருந்து வெளியேறுவோம் எனவும் எச்சரித்துள்ளது. இதுதொடர்பான முக்கிய முடிவுகள் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையின் முடிவில் எடுக்கப்படும் என தெரிகிறது. இதில் அமெரிக்கா சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மொகமது பகெர் கலிபாஃப் தலைமையிலான குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்























