அழியப்போகும் பாகிஸ்தான்.. இந்தியா எடுக்கும் அடுத்த அதிரடி முடிவு.. அடுத்த பிளான் இதுதான்!
சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதால் ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை பாகிஸ்தானில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஏற்கனவே தண்ணீர் பிரச்னையால் அவதிப்படும் பாகிஸ்தானை மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் வகையில் இந்தியா அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
இந்தியாவும், பாகிஸ்தானும் உலக அரங்கில் பரம எதிரி நாடுகளாக கருதப்படுகிறது. அரசியல் தொடங்கி கிரிக்கெட் வரை அங்கு அனைத்தும் பிரதிபலிக்கிறது. இப்படியான நிலையில் கடந்தாண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் என்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டு பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.
சிந்து நதிநீர் ஒப்பந்தம்
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறது. காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை அடுத்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் பாகிஸ்தான் பெரும் சிக்கலுக்கு ஆளானது. 1960 ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தம் சிந்து, ஜீலம், செனாப் நதிகளின் நீர் பாகிஸ்தானுக்கும், ராவி, பியாஸ், சட்லஜ் நதிகளின் நீர் இந்தியாவுக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த சிந்து நதி திபெத்தில் தொடங்கி ஜம்மு காஷ்மீர் வழியாக பாய்ந்து பாகிஸ்தானின் அரபிக்கடலில் கலக்கிறது. இதில் 80 சதவிகிதம் நீர் பாகிஸ்தானால் பயன்படுத்தப்படுகிறது.
ராவி நதிநீரை நிறுத்த திட்டம்
இந்த நிலையில் அடுத்த அதிரடியாக ராவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் நீரானது தடுத்து நிறுத்தப்பட உள்ளது. ஏற்கனவே சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டதால் பாகிஸ்தான் ஏற்கனவே தத்தளித்து வரும் நிலையில் இப்படியான நடவடிக்கை பாகிஸ்தானில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய ஜம்மு-காஷ்மீர் அமைச்சர் ஜாவேத் அகமது ராணா, “வறட்சியால் பாதிக்கப்பட்ட கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு நீர்ப்பாசனம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நீர் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் ராவி நதி நீர் நிறுத்தப்பட்டால் பாகிஸ்தானில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து கேட்டபோது, “பாகிஸ்தானைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்? அவர்கள் ஒரு சிறிய எண்ணிக்கை கொண்டவர்கள். அவர்கள் தாங்களாகவே உருவாக்கிய பிரச்சினைகளில் மூழ்கட்டும்” என பதிலளித்தார்.
இப்போது ராவி நதியிலிருந்து வெளியேறும் உபரி நீர் இந்தியாவால் பயன்படுத்தப்படாமல் பாகிஸ்தானுக்குள் பாய்கிறது. பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் இடையேயான பிரச்னைகள் காரணமாக இந்த நதி நீரை சேமிப்பதற்காக தொடங்கப்பட்ட ஷாப்பூர் கண்டி தடுப்பணை பணி பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த தடுப்பணையை கட்டி முடிப்பதன் மூலம் அதிகப்படியான நீர் ராவியிலிருந்து செல்வது தடுக்கப்படும்.
நீர் குறைப்பு செய்யப்பட்டால் நிச்சயம் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அனைத்திற்கும் அடிப்படை நீர் என்ற நிலையில் இதனால் மக்கள் உயிரிழப்புகளும் நிகழ வாய்ப்புள்ளது. எனவே அடிப்படை விஷயத்தில் மக்கள் பாதிக்கா வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறுகள் சிலர் செய்திருந்தாலும் அனைவரையும் தண்டிப்பது கடினமான முடிவு தான் என சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் மீது இந்தியா பெரும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் விவசாய நிலங்கள் கிட்டதட்ட 80% சிந்து நதி அமைப்பைச் சார்ந்துள்ளது. மேலும் பாகிஸ்தானுக்குள் செல்லும் பிற நதிகளின் நீரோட்டத்தை குறைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.























