உலகின் மிக உயரமானப் பெண்மணி என்று கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ருமேயா கெல்கி மேலும் 3 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.


215.16 செ.மீ அதாவது 7 அடி 0.7 இன்ச் உயரம் கொண்ட ருமேயா கெல்கி உலகின் மிக உயரமான வாழும் பெண்மணி என்று கடந்த 2021ம் ஆண்டு கின்னஸ் நிறுவனத்தால் இரண்டாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டார். Weaver syndrome என்ற மிக அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட ருமேயா மிக உயரமாக வளர ஆரம்பித்தார். இதற்கு முன்பாக 2014ம் ஆண்டு அவருக்கு 18 வயது ஆகியிருந்தபோது, உலகின் மிக உயரமான இளம்பெண் என்று கின்னஸ் நிறுவனத்தால் முதல் முறையாக அங்கீகரிக்கப்பட்டிருந்தார்.




துருக்கி நாட்டைச் சேர்ந்தவரான ருமேயாவால் எழுந்து நீண்ட தூரம் நடக்க முடியாது. இதனால் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியை வீல் சேரில் கழிக்கும் ருமேயாவால்,  வாக்கரின் உதவியுடன் தான் நடக்கவும் முடியும். அதுவும் நீண்ட தூரத்திற்கு இல்லை. குறிப்பிட்ட தூரம் சென்ற பின் உட்கார வேண்டும் என்ற அளவிற்கு தான் அவரது உடல் நிலை உள்ளது. 1997 ஜனவரி 1ம் தேதி பிறந்த ருமேயா வழக்கறிஞர், ஆய்வாளர் மற்றும் front end developer ஆக உள்ளார்.




ஏற்கனவே இரண்டு கின்னஸ் சாதனைகளைப் படைத்துள்ள ருமேயாவின் பட்டியலில் மேலும் மூன்று கின்னஸ் சாதனைகள் சேர்ந்துள்ளது. 11.2 செ.மீ நீளம் கொண்ட விரல்களைக் கொண்டுள்ள ருமேயா, நீளமான விரல்களைக் கொண்ட வாழும் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 24.93 செமீ நீளத்திற்கு ருமேயாவின் வலது கை வளர்ந்துள்ளதால் உயரமான கைகளைக் கொண்ட வாழும் பெண்மணி என்ற நான்காவது கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். 59.90 செ.மீ அளவுக்கு நீளமான முதுகைக் கொண்டிருப்பதால் நீளமான முதுகைக் கொண்டிருக்கும் வாழும் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ருமேயா. 




இந்த மூன்று புதிய கின்னஸ் சாதனைகள் மூலம் மொத்தமாக ஐந்து கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரராகியிருக்கிறார் ருமேயா. “உயரமாக இருப்பதற்காக நான் என் சிறுவயதில் பலமுறை கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறேன். ஆனால், எனது உயரம் தான் எனக்கு கின்னஸ் சாதனையை வாங்கிக்கொடுத்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.



இதில் ஆச்சர்யப்படத்தக்க விஷயம் என்னவெனில், உலகின் மிக உயரமான மனிதர் என்று கின்னஸ் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட, 8 அடி 2.8 இன்ச் உயரம் கொண்ட சுல்தான் கொசேனும் துருக்கியைச் சேர்ந்தவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.