அடுத்தடுத்த புகைப்படங்களால் சர்ச்சையில் சிக்கி வருகிறார் பின்லாந்து பிரதமர் சன்னா மரீன். ஏற்கனவே பார்ட்டி டான்ஸ் வீடியோ வைரலாகி சர்ச்சையானது. இந்நிலையில் அவரது தோழிகள் மேலாடையின்றி எடுத்த புகைப்படம் ஒன்று மீண்டும் சன்னாவை சர்ச்சையில் சிக்க வைத்துள்ளது


வைரல் வீடியோ.. 


பின்லாந்து நாட்டு பிரதமர் சன்னா மரீன் தனது நண்பர்களுடனான பார்ட்டி ஒன்றில்  டான்ஸ் ஆடிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த வீடியோவுக்கு ஒரு தரப்பினர் கடுமையான கண்டனங்களை பதிவிட்டனர். ஒரு நாட்டின் பிரதமர் இப்படி பொறுப்பின்றி மது அருந்தி, நடனம் ஆடலாமா என்று சன்ன மரீனுக்கு பலரும் கண்டனங்களும் விமர்சனங்களும் தெரிவித்தனர். அதேவேளையில் சன்னாவுக்கு ஆதரவாக குரல்களும் எழுந்தன. தன்னுடைய குடியிருப்பில் அவர் நடனம் ஆடியது தனிப்பட்ட விருப்பம் என்றும் அது குறித்தான விமர்சனம் பிரைவசியில் தலையிடுவது என்றும் குறிப்பிட்டனர்






போதைப்பொருள் பயன்படுத்தினாரா? 


பிரதமர் போதை பொருள் உட்கொண்டுவிட்டு நடனம் ஆடியதாகவும், அதுதான் இங்கு விமர்சனத்துக்கு உள்ளாவதாகவும் கண்டனம் தெரிவித்தவர்கள் தொடர்ந்து குறிப்பிட்டனர். ஆனால் போதைபுகாருக்கு மறுப்பு தெரிவித்த பிரதமர் சன்னா, நான் சட்டத்துக்கு புறம்பான எந்தவிதபோதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை. மது மட்டுமே அருந்தினேன் என்றார்.ஆனால் தொடர் புகாரை அடுத்து அவர் போதை வஸ்து பயன்படுத்தினாரா என்ற சோதனை நடத்தப்பட்டது. இது குறித்து தெரிவித்த அந்நாட்டு அரசு, ‘ பிரதமர் போதைப்பொருள் எதுவும் பயன்படுத்தவில்லை. சிறுநீர் மூலம் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் அனைத்தும் நெகட்டிவ் என்றே முடிவு வந்துள்ளது. மேலும் இந்த சோதனைக்கான கட்டணத்தை பிரதமர் தன் வருமானத்தில் இருந்தே கொடுத்துள்ளார்’ எனக் குறிப்பிடப்பட்டது. 






அடுத்த சர்ச்சை..


இந்நிலையில் தற்போது அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் சன்னா.அவரது தோழிகள் இருவர் பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இடத்தில் மேலாடையின்றி கையில் பின்லாந்து என்ற போர்டை வைத்துக்கொண்டு முத்தமிட்டுக்கொள்கின்றனர். இந்த போட்டோதான் தற்போது சன்னாவுக்கு தலைவலியாக மாறியது. இது குறித்து பேசிய சன்னா, "என்னை பொருத்தவரை இப்படியான புகைப்படம் பொருத்தமற்றதுதான். அதற்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தோழிகளின் அப்படியான புகைப்படத்தை எடுத்திருக்கவே கூடாது. ஜூலையில் நடந்த ஒரு பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ" என்றார். மேலும் பேசிய அவர், "நானும் மனுஷிதான். எனக்கும் சந்தோஷமாக இருக்க உரிமை உள்ளது. இந்த பார்ட்டி எல்லாம் என்னுடைய தனிப்பட்ட நேரத்தில் நடக்கக்கூடியது. இதனால் என்னுடைய வேலை பாதிக்கப்பட்டதில்லை. ஒருநாள் வேலையைக் கூட நான் தவறவிட்டதில்லை" என்றார்.