ஆப்கானிஸ்தானில் 55 லட்சம் பேர் இடம்பெயர்ந்து இருப்பதாக இடம்பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு (IOM) தெரிவித்து உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) ஓசா அமைப்பு வெளியிட்டு உள்ள தகவலின் படி கடந்த 8 மாதகங்களில் மட்டும் 5,00,592 ஆப்கானிஸ்தான் மக்கள் இடம்பெயர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.


அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானுக்கு இருந்து ஆவணங்கள் இல்லாத 8.5 லட்சத்துக்கும் அதிகமான ஆப்கானியர்கள் 8 மாதங்களில் சென்று இருப்பதாக அந்நாட்டின் பிரபல செய்தி தொலைக்காட்சியான டோலோ நியூஸ் தெரிவித்து இருக்கிறது.


“நான் 8 நாட்களுக்கு என் வீட்டை விட்டு வெளியேறினேன். 6 நாட்கள் ஈரான் எல்லையில் கழித்துள்ளேன். ஈரான் எல்லையில் மட்டும் பெண்கள், குழந்தைகள் உட்பட 3,000 த்துக்கும்  அதிகமான மக்கள் உள்ளனர். அவர்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றனர். நான் ஈரானுக்கு செல்ல வேண்டும்.” என  வேதனையுடன் கூறுகிறார் அமானுல்லா. இவர் நிம்ரோஸ் மாகாணத்தை சேர்ந்தவர்.


ஆப்கானிஸ்தான் அமெரிக்க ஆதரவு அரசு ஆட்சியில் இருந்தபோதே பஞ்சம், வறுமை மற்றும் வேலை வாய்ப்பு இன்மையால் தவித்து வந்த அந்நாட்டு மக்கள் கடந்த ஓராண்டாகவே அந்நாட்டை விட்டு தப்பிச் செல்வதாக டோலோ செய்தி ஊடகத்திடம் தெரிவித்து உள்ளனர். ”எனக்கு ஆப்கானிஸ்தானை விட்டுத் தப்பிச் செல்ல விருப்பம் இல்லை. ஆனாலும் நான் போய் ஆக வேண்டும். என் குடும்பத்தை காப்பாற்ற என் தாய் நாட்டை விட்டு நான் கிளம்ப வேண்டும்” என கூறுகிறார் பதக்ஸ்தான் பகுதியை சேர்ந்த செய்யது வாலி.



ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாடுகளுக்கு அந்நாட்டு மக்கள் செல்வதை தாலிபான் அரசு விரும்பவில்லை. அவர்களை உள்நாட்டிலேயே தங்க வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து தாலிபான் அமைச்சரவை ஒருங்கிணைப்பாளர் அர்சலான் கருதி தெரிவிக்கையில், “நாங்கள் அவர்களை ஆப்கானிஸ்தானிலேயே இருக்க கேட்டுக்கொள்கிறோம். ஆப்கானிஸ்தான் பாதுகாப்பாக உள்ளது. இங்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறோம். பொருளாதாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எதிர்கால வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம்.” என்றார்.


ஆஃப்கானிஸ்தானில் 2001 ஆம் ஆண்டு படைகளை குவித்த அமெரிக்கா அங்கிருந்த தலிபான் அரசை கவிழ்த்துவிட்டு தங்களுக்கு   சாதகமான பொம்மை அரசை நிறுவியது. இந்த நிலையில், கத்தாரில் தலிபான் தலைவர்களுடன் அமெரிக்கா கடந்த மார்ச் மாதம் போட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆகஸ்டு முதல் அமெரிக்க படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.


அமெரிக்க படைகள் விலக விலக ஆப்கானிஸ்தானில் ஒவ்வொரு மாகாணமாக தலிபான் படைகள் முன்னேறினர்.  அதன் விளைவாக கடந்த ஆக்ஸ்டு 15ஆம் தேதி ஆஃப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் தலிபான் கொண்டு வந்தது.  இதனால் ஆஃப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் கனி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தஜிகிஸ்தான் நாட்டிற்கு தப்பினார்.