தன்னிடம் இருந்து நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்து, இந்தோ- பசிபிக் பிராந்திய  நாடுகளிடம் இருந்து அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் வாங்கும் ஆஸ்திரேலியா அரசின் முடிவுக்கு பிரான்ஸ் அரசு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது

  


முன்னதாக, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பிரான்ஸ் நாட்டு கப்பல் கட்டும் நிறுவனத்திடம் 12 நீர்மூழ்கிக் கப்பல் வாங்குவது என ஆஸ்திரேலியா அரசு முடிவெடுத்தது. இந்நிலையில், நேற்று பிரான்ஸ் நாட்டு கப்பல் கட்டும் நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.


ஆஸ்திரேலிய அரசின் இந்த செயலுக்கு பிரான்ஸ் அரசு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தது. உச்சபட்ச நடவடிக்கையாக, பிரான்ஸுக்கான அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய தூதரை அந்நாட்டு அரசு திரும்ப அளித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Jean-Yves Le Drian இது குறித்து உரையாடுகையில், "இது, முதுகில் குத்துவதற்கு சமம். 50 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது. பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்துள்ளோம்.  அதிபரின் அறிவுரையின் பேரிலே தூதர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர்" என்றும் தெரிவித்தது.        


மூன்று நாடுகளின் Aukus கூட்டமைப்பு:  முன்னதாக, நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளின் கூட்டமைப்பை அமெரிக்கா அறிவித்தது. 21-ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப இந்தோ- பசிபிக் பகுதியில் தடையற்ற அமைதி, ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு பராமரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இந்த கூட்டமைப்பு செயல்படும் என்று அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். கூட்டமைப்பின் முதற்கட்ட நடவடிக்கையாக, அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டின் துணையுடன் நீர்மூழ்கிக் கப்பலின் இயக்கத்தை ஆஸ்திரேலியா தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




முன்னதாக, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முதல் நாற்கர (க்வாட்- QUAD Alliance) கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நடத்தினார். இதில், கலந்து கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான இந்திய- பசிபிக்கை உருவாக்குவதற்கும் முன்பை விடவும் நெருக்கமாக நாம் இணைந்து பணிபுரிவோம். இன்றைய உச்சிமாநாட்டின் கூட்டம், க்வாட் அமைப்பு வளர்ச்சி அடைந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது. இந்த பிராந்தியத்தில் நிலையான, முக்கிய தூணாக இனி இது விளங்கும்" என்று தெரிவித்தார். 


சமீப காலங்களில்,  சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் அமெரிக்கா இந்திய- பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக, ஐரோப்பா- அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான அடிப்படை உறவுகளில் சில மாற்றங்கள் நடந்தேறி வருகின்றன. அதன் வெளிப்பாடாகத்தான் பிரான்ஸ் அரசு தனது அமெரிக்கா தூதரை திரும்ப அழைக்கும் அளவுக்கும் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.   


சீனா ஆதங்கம்:  


மூன்று நாடுகளின் Aukus கூட்டமைப்பை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இதுகுறித்து கூறுகையில், "பிராந்திய அமைதியை சீர்குலைக்கும் விதமாக மூன்று நாடுகளின் கூட்டமைப்பு அமைந்துள்ளது. சர்வதேச அளவில் ஆயுதப் போட்டி ஏற்படுவதற்கான வாய்ப்பு  அதிகரித்துள்ளது. அணு ஆயுத ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் சமரசம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகியுள்ளன" என்று தெரிவித்தார்.