Iran Attack Arab Nations: அண்டை நாடுகள தொடர்ந்து அடிப்போம்; ஈரான் நீதித்துறை தலைவர் அதிரடி; அப்போ மன்னிப்பு கேட்டது..?!
அரபு நாடுகள் தாக்கப்பட்டதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரிய சில மணி நேரங்களிலேயே, அந்நாடுகள் தாக்கப்படும் என ஈரான் நீதித்துறை தலைவர் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், அதற்கு தளங்களை வழங்கிய அண்டை நாடுகளான அரபு நாடுகள் மீது ஈரான் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த சூழலில், அண்டை நாடுகள் மீதான தாக்குதல்களுக்கு நேற்று மன்னிப்பு கோரினார் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன். அவர் மன்னிப்பு கோரிய சில மணி நேரங்களிலேயே, ஈரானின் நீதித்துறை தலைவர், அண்டை நாடுகள் மீது தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார். அவரது அறிவிப்பு என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
“அண்டை நாடுகள் மீதான தாக்குதல்கள் தொடரும்“
இது குறித்து பேசியுள்ள ஈரான் நீதித்துறை தலைவரும், அந்நாட்டின் இடைக்கால தலைமைத்துவ குழுவின் உறுப்பினருமான கோலம்ஹோசைன் மொஹ்சேனி எஜேய், தங்கள் நாட்டிற்கு எதிரான ஆக்கிரமிப்பிற்காக நடத்தப்படும் தாக்குதல்களுக்கு, தங்கள் தளங்களை வழங்கியுள்ள பிராந்திய அண்டை நாடுகள் தொடர்ந்து குறிவைக்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஈரான் ஆயுதப்படையின் வசம் உள்ள ஆதாரங்கள், பிராந்தியத்தில் உள்ள சில நாடுகள் புவியியல் ரீதியாக வெளிப்படையாக இருக்கும் போதிலும், மறைமுகமாக அவை எதிரிகளின் வசம் உள்ளதை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார். அப்படிப்பட்ட இலக்குகள் மீது கடுமையான தாக்குதல்கள் தொரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சரணடைய மாட்டோம் என அறிவித்த ஈரான்
நேற்று, அமெரிக்கப் படைகளுக்கு தளங்களை கொடுத்துள்ள வளைகுடா அண்டை நாடுகள் மீது, ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை ஈரான் நடத்தியது. மேலும், தாக்குதலை கடுமையாக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், தாங்கள ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று ஈரான் அறிவித்தது.
இதையடுத்து, இஸ்ரேலும் அமெரிக்காவும் மீண்டும் ஈரானை தாக்கின. ஒரு வான்வழித் தாக்குதலில், டெஹ்ரான் விமான நிலையம் தீப்பிடித்தது. ஆனால், ஈரான் ராணுவ ரீதியாக பதிலடி கொடுக்கும் திறனை கொண்டுள்ளது என்பதை காட்டியது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேலின் ஜெருசலேம் மற்றும் கத்தாரின் தோஹாவில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் மற்றும் குண்டுவெடிப்புகள் நடந்தன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் பஹ்ரைன் மீது அதிகாலையிலும் பிற்பகலிலும் இரண்டு அலைத் தாக்குதல்கள் நடந்தன.
நேற்று காலை தனது வான் பாதுகாப்பு அமைப்பு, 15 ஏவுகணைகள் மற்றும் 119 ட்ரோன்களை இடைமறித்ததாகவும், சர்வதேச போக்குவரத்திற்கு உலகின் மிகவும் பரபரப்பான துபாய் விமான நிலையத்தில் ஒரு ஏவுகணை மோதியதை வீடியோ காட்சிகள் காட்டியதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது. விமான நிலைய கட்டிடத்தின் முன் நிறுத்தப்பட்டிருந்த விமானங்களுக்கு அருகிலும், கடந்து செல்லும் ரயிலுக்கு அருகிலும் வெடிப்பு நிகழ்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னிப்பு கோரிய ஈரான் அதிபர்
முன்னதாக, ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், அமெரிக்காவின் முக்கிய ராணுவ தளங்களை வைத்திருக்கும் ஈரானின் அண்டை நாடுகளிடம், தங்களின் தாக்குதல்களுக்காக மன்னிப்பு கேட்டிருந்தார். அதே நேரத்தில், அமெரிக்க ஊடக அறிக்கைகள், இஸ்லாமிய குடியரசிற்கு இலக்கு தொடர்பான உளவுத்துறை உதவியை ரஷ்யா வழங்கக்கூடும் என்று தெரிவித்தன.
அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்த விமானப்படைத் தளத்தில் ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்ததாக சவுதி அரேபியா சனிக்கிழமை கூறியது. அதே நேரத்தில், கடந்த வாரம் ஈரான், தங்கள் நாட்டிற்குள் உள்ள "முக்கியமான நிறுவல்களை குறிவைத்து" தாக்கியதாக ஜோர்டான் குற்றம் சாட்டியது.
இந்த நிலையில் தான், ஈரான் அதிபரின் கூற்றுக்கு நேரெதிராக அந்நாட்டின் நீதித்துறை தலைவரின் கூற்று அமைந்துள்ளது. ஈரானை அழிக்கும் அளவிற்கு தாக்குதலை இரவில் நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்த நிலையில், அது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
ட்ரெண்டிங் செய்திகள்






















