US Threat Khamenei Escape: அச்சுறுத்தும் அமெரிக்கா; அலெர்ட்டான ஈரான் உச்ச தலைவர்; 37 வருட பாரம்பரியத்தை கைவிட்ட காமேனி
ஈரானை அச்சுறுத்தும் வகையில் வளைகுடா பகுதியில் அமெரிக்கா படைகளை குவித்து வரும் நிலையில், 37 வருட பாரம்பரியத்தை கைவிட்டு, ஒரு முக்கியமான நிகழ்வில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளார் ஈரான் தலைவர் காமேனி.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு ஏற்கனவே தாக்குதல் எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், வளைகுடா பகுதியில் அமெரிக்கா தனது படைகளை குவித்து வருகிறது. இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானில் நடைபெற்ற விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பை, அந்நாட்டு உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தவிர்த்துள்ளார். இதன் மூலம், 37 ஆண்டுகளாக இந்நிகழ்வில் பங்கேற்பதை பாரம்பரியமாக வைத்திருப்பதை அவர் தவற விட்டுள்ளார். அது எதனால் என்பதை பார்ப்போம்.
37 வருடங்களாக அவர் கடைபிடித்தது என்ன.?
ஈரானில், ஒவ்வொர வருடமும் பிப்ரவரி 8-ம் தேதி, விமானப்படைத் தளபதிகளுடனான வருடாந்திர சந்திப்பு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. 1989-ம் ஆண்டு தலைமைப் பொறுப்பேற்றதிலிருந்து, கோவிட்-19 தொற்றுநோய் பரவிய காலகட்டம் உட்பட, காமேனி ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக ஈரான் இன்டர்நேஷனல் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த வருடாந்திர கூட்டம், 1979 பிப்ரவரி 8-ம் தேதி அன்று, பஹ்லவி வம்சத்தை தூக்கியெறிய ருஹோல்லா காமேனிக்கு விசுவாசமாக இருப்பதாக விமானப்படை அதிகாரிகள் குழு உறுதியளித்ததைக் குறிக்கிறது. கோமேனி இஸ்லாமிய குடியரசின் நிறுவனர் மற்றும் காமேனியின் முன்னோடி உச்ச தலைவராக இருந்தார்.
அடுத்த நான்கு தசாப்தங்களில், அந்த நாள் ஒரு அடையாள நிகழ்வாக மாறியது. விமானப்படை வீரர்கள் மற்றும் தளபதிகள், ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் ஈரானின் மதகுருமார் தலைமையைச் சந்தித்தனர். இந்த ஆண்டு, காமேனிக்கு பதிலாக, ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி அப்துல்ரஹிம் மௌசவி, ராணுவ விமானப்படைத் தளபதிகளைச் சந்தித்ததாக அறிக்கை கூறுகிறது.
காமேனி தவிர்த்ததன் காரணம் என்ன.?
ஈரானை ஏற்கனவே அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ள நிலையில், எந்த நேரமும் தாக்குதல் நடைபெறலாம் என்ற பதற்றம் அந்த பிராந்தியத்தில் நிலவி வருகிறது. அதற்கு ஏற்றார்போல் அப்பகுதியில் அமெரிக்கா தனது படைகளை அதிக அளவில் குவித்து வருகிறது.
அமெரிக்காவின் எந்த ஒரு தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானும் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதனிடையே, இரு நாட்டு பிரதிநிதிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. எனினும், தாக்குதலுக்கான சூழலும் நிலவி வருகிறது. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான விஷயங்களை ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் ஏற்கனவே கூறப்பட்டது.
இந்த சூழலில், எந்த ஒரு அசம்பாவிதங்களையும் தவிர்க்கும் விதமாகவே, விமானப்படை தளபதிகளை சந்திக்கும் தனது 37 ஆண்டுகால பாரம்பரிய நடைமுறையை, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி தவிர்த்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்கா போரை தொடங்கினால், அது பிராந்திய போராக மாறும் என்று காமேனி ஏற்கனவே எச்சரித்திருந்தார். அதை சோதிப்பதற்காகவே ட்ரம்ப் தாக்குதலை நடத்தப் போவதாக சூசகமாக தெரிவித்திருந்தார்.
படைகளை குவித்துவரும் அமெரிக்காவால் பதற்றம்
இந்த சூழலில், ஜனவரி மாத இறுதியில், அமெரிக்கா தனது விமானம் தாங்கிக் கப்பலான USS ஆபிரகாம் லிங்கனை அரபிக் கடலுக்கு அனுப்பியது. கடந்த வாரம், ஜோர்டானில் உள்ள முவாஃபாக் சால்டி விமானத் தளத்திற்கு ஒரு டஜன் F-15 போர் விமானங்கள், ஒரு MQ-9 ரீப்பர் போர் ட்ரோன் மற்றும் பல A-10C தண்டர்போல்ட் II தரைவழித் தாக்குதல் விமானங்கள் வந்ததாக BBC செய்தி வெளியிட்டது.
வழிகாட்டப்பட்ட ஏவுகணை அழிப்பான் கப்பலான USS Delbert D Black, எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாய் வழியாக மத்தியதரைக் கடலில் இருந்து, செங்கடல் வரை பயணிப்பதையும், அமெரிக்க கடற்படை MQ-4C ட்ரைடன் கண்காணிப்பு ட்ரோன் வளைகுடாவில் இயங்குவதையும் காட்டும் செயற்கைக்கோள் படங்களை பகுப்பாய்வு செய்ததாக, பிரிட்டிஷ் வெளியீடு தெரிவித்துள்ளது. E-11A தகவல் தொடர்பு விமானம், P-8 Poseidon மற்றும் E-3G Sentry கண்காணிப்பு மற்றும் உளவு விமானங்கள் இருப்பதும் இப்பகுதியில் முன்னதாகவே தெரிவிக்கப்பட்டது.
இதனால், அமெரிக்கா எந்த நேரமும் ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற பதற்றம் அப்பகுதியில் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.























