Pak-US: “டாய்லெட் பேப்பர விட மோசமா யூஸ் பண்ணிக்கிட்டாங்க” நாடாளுமன்றத்தில் பாக்., அமைச்சர் புலம்பல்
Pak Khawaja Asif: அமெரிக்கா தங்களை கழிவறைக்கான காகிதத்தை விட மோசமாக பயன்படுத்திக் கொண்டதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே வேதனை தெரிவித்துள்ளார்.

Pak Khawaja Asif: அமெரிக்கா உடனான கடந்த கால உறவுகளை குறிப்பிட்டு, அநாட்டை பாகிஸ்தான் பாதுகப்பு அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் புலம்பல்:
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், அமெரிக்கா தங்களது சுயநலனுக்காக லாகூரை சுரண்டிக் கொண்டு, வேலை முடிந்ததும் கழிவறை காகித்தத்தை விட மோசமாக நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளார். முன்னெப்போதும் இல்லாத வகையிலான மிகப்பெரிய ஒப்புதலாக இது கருதப்படுகிறது. அவையில் பேசிய கவாஜா, ”1999 க்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவுடன் கூட்டணி வைக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு, குறிப்பாக ஆப்கானிஸ்தான் தொடர்பாக தங்களுக்கு நீடித்த சேதத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் ஆதரவைப் பின்தொடர்வது ஒரு மிகப்பெரிய தவறான கணக்கீடு. அதன் விளைவுகளை பாகிஸ்தான் பல தசாப்தங்களுக்குப் பிறகும் தொடர்ந்து அனுபவிக்கும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
”கழிவறை காகிதத்தை விட மோசம்”
அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலை குறிப்பிட்டு பேசிய கவாஜா, “முன்னாள் ராணுவ ஆட்சியாளர்களான ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் ஆகியோர் பாகிஸ்தானை வெளிப்புறப் போர்களில் சிக்க வைத்தனர். நட்பு நாடுகள் அதிலிருந்து விலகிச் சென்ற பிறகும் அதன் விளைவுகளை பாகிஸ்தான் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. அமெரிக்கவின் தேவைக்காக நம்மை பயன்படுத்திக் கொண்டு, தேவை முடிந்ததும் தூக்கி எறிந்தது. அந்த நேரத்தில் கழிவறை காகிதத்தை விட மோசமாக பாகிஸ்தான் மதிக்கப்பட்டது. இதனால் சந்தித்த இழப்புகளை ஒருபோதும் ஈடுசெய்ய முடியாது. அந்த முடிவுகள் திருத்த முடியாத தவறுகள். அவை பாகிஸ்தானை மோதல்களின்போது மற்றவர்களால் இயக்கப்படும் பகடைக்காயாக மாற்றின” எனவும் தெரிவித்தார்.
தேவையில்லாத போர்கள்..
பல ஆண்டுகளாக பாகிஸ்தான் அதிகாரப்பூர்வமாக கூறி வந்த பல தகவல்களையும் கவாஜா நிராகரித்துள்ளார். அதன்படி, “ஆஃப்கானிஸ்தான் மோதலில் பாகிஸ்தானின் தலையீடு என்பது மதக் கடமையின் பேரில் முன்னெடுக்கப்பட்டது என்பது உண்மையில்லை. பாகிஸ்தானியர்கள் அணி திரட்டப்பட்டு ஜிஹாத் என்ற பேரில் போராட அங்கு அனுப்பப்பட்டனர். இது அழிவுகரமான செயல். இந்த போர்களை நியாயப்படுத்தும் வகையில் மறுசீரமைக்கப்பட்ட கல்வி நடைமுறை இன்று வரை பல கருத்தியல் மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.
1980 களில் ஆப்கானிஸ்தானில் நடந்த சோவியத்திற்கு எதிரான போரானது, எந்தவொரு உண்மையான மதக் கட்டாயமும் இன்றி, அமெரிக்க புவிசார் அரசியல் நலன்களால் மட்டுமே முன்னெடுக்கப்பட்டது. பாகிஸ்தான் தனக்கு அவசியமற்ற மோதல்களில் பங்கேற்றது நாட்டில் நீண்டகால உறுதியற்ற தன்மையையும் சமூக சேதத்தையும் உருவாக்கியது, இது இன்னும் முழுமையாக சரிசெய்யப்படவில்லை” எனவும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் பேசியிருக்கிறார். இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூருக்கு பிறகு, அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சரின் இந்த கருத்து மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
























