அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து ஈரானுடன் போரிட்டு வரும் நிலையில், அது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த போரால் அமெரிக்காவிற்கு ஏற்கனவே எக்கச்சக்க செலவு என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ட்ரம்ப்புக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன். ஆம், ஈரான் போருக்கு கூடுதல் நிதியாக 200 பில்லியன் டாலர்கள் வேண்டும் என்று ராணுவம் கேட்டுள்ளதாம்.
தீவிரமாக நடைபெற்றுவரும் போர்
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகள் ஈரானுக்கு எதிராக தீவிர தாக்குதல்களை நடத்தி வருகின்றன. 21-வது நாளை எட்டிய இந்த போரில், இரு தரப்பிலும் தாக்குதல்கள் கடுமையாக நடைபெற்றுவரும் நிலையில், அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு உதவும் வளைகுடா நாடுகளையும் ஈரான் அடித்து நொறுக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில், 8 நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், இரு தரப்பிலும் எண்ணெய் வளல்கள், கிடங்குகள், எரிவாயு மையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதில் ஒரு பெரும் செய்தியாக, அமெரிக்காவின் அதிநவீன போர் விமானமான F-35 ஸ்டெல்த் ஃபைட்டர் ஜெட்டை அடித்துள்ளது ஈரான். இதனால், உலக அளவில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால், மறைந்து தாக்கும் இந்த 5-ம் தலைமுறை போர் விமானத்தை யாராலும் தொடக் கூட முடியாது என்று அமெரிக்கா மார்தட்டி வந்தது. ஆனால், அதை தவிடுபொடியாக்கும் விதமாக, ஈரான் அந்த ஜெட்டை அடித்து, அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.
ஏற்கனவே ஈரானின் நீர்மூழ்கிக் கப்பல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ராணுவ அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியுள்ளார். அதேபோல், ஈரானின் ஏவுகணை வசதிகளை அழித்துவிட்டதாகவும் அமெரிக்கா கூறியது. ஆனால், மறுபுறம் ஈரான் ஏவுகணைகளை ஏவி கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ட்ரம்ப்புக்கு அதிர்ச்சி கொடுத்த பென்டகன்
இதனால் ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிர்ச்சியில் இருக்கும் சூழலில், மேலும் ஒரு இடியை இறக்கியுள்ளது அந்நாட்டு ராணுவ தலைமையகமாக பென்டகன். அது என்னவென்றால், ஈரான் போருக்கு கூடுதலாக 200 பில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 18 லட்சம் கோடி ரூபாய் நிதி தேவை என்ற கோரிக்கைதான் அது.
மேலும், இந்த தொகையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். ராணுவத்திற்கு தேவையான நிதியை உறுதி செய்ய, நாடாளுமன்றத்தை அணுக உள்ளதாக கூறியுள்ள அவர், மோசமான நபர்களை கொல்ல இந்த கூடுதல் நிதி ராணுவத்திற்கு தேவைப்படுவதாக கூறியுள்ளார்.
அதோடு, இது மிகவும் அதிகமான தொகை என்பதால், இந்தி புதிய செலவின கோரிக்கைக்கு காங்கிரஸ் ஒப்புதல் தேவைப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்தகைய செலவுகளுக்கு அரசியல் ஆதரவு இருக்குமா என்பதும் தெளிவாக தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ, ஈரானை தாக்க ஆரம்பித்ததிலிருந்து, கெட்ட நேரம் ஈரானுக்கு இல்லை, அமெரிக்காவிற்கத் தான் என்பதுபோல் தான் நடக்கும் சம்பவங்கள் இருக்கின்றன. இது ட்ரம்ப்பிற்கு நிச்சயம் ஷாக் கொடுக்கும் விஷயம்தானே.?
