Venezuela Crude Oil Reliance: அம்பானிக்கு அடித்த யோகம்.! வெனிசுலா கச்சா எண்ணெய் இறக்குமதி; ரிலையன்சுக்கு அமெரிக்கா அனுமதி
வெனிசுலாவிலிருந்து நேரடியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, இந்தியாவன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து இப்போது பார்க்கலாம்.

வெனிசுலாவில் உள்ள கச்சா எண்ணெய் இருப்பை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த அமெரிக்கா, தற்போது, அந்நாட்டிலிருந்து நேரடியாக கச்சா எண்ணயை இறக்குமதி செய்ய, இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு உரிமம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவை கட்டுப்படுத்தும் அமெரிக்கா
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவிற்குள் திடீரென அதிரடியாக புகுந்த அமெரிக்க படைகள், அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்து, அமெரிக்காவிற்கு நாடு கடத்தினர்.
அதைத் தொடர்ந்து, அவர்கள் மீது போதைப்பொருள் பயங்கரவாத வழக்கு தொடரப்பட்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றவே அமெரிக்கா இவ்வாறு செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனை நிரூபிக்கும் வகையில், வெனிசுலாவில் இருப்பில் உள்ள மொத்த கச்சா எண்ணெயையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதற்கு, வெனிசுலாவின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ள துணை அதிபராக இருந்த சிலியா புளோரஸ் ஒத்துழைப்பு அளித்துள்ளார்.
இந்தியாவிற்கு அழுத்தம் கொடுத்த ட்ரம்ப்
இதைத் தொடர்ந்து, ரஷ்யா, ஈரானை விடுத்து, வெனிசுலா கச்சா எண்ணெயை தங்களிடமிருந்து வாங்குமாறு இந்தியாவை வலியுறுத்தினார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதைத் தொடர்ந்து, சமீபத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியான நிலையில், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ய மாட்டோம் என பிரதமர் மோடி உறுதி அளித்திருப்பதாக ட்ரம்ப் அறிவித்தார்.
இதற்கு இந்தியாவிடமிருந்து இன்னும் எந்த எதிர்வினையும் வெளிப்படாத நிலையில், இந்தியாவிற்காக ரஷ்யா குரல் கொடுத்தது. யாருடன் வர்த்தகம் செய்வது என்ற முடிவை எடுக்க இந்தியாவிற்கு உரிமையுள்ளதாகவும், அமெரிக்கா தேவையில்லாத அழுத்தத்தை கொடுப்பதாகவும் கூறி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி.?
இப்படிப்பட்ட சூழலில் தான், பல்வேறு துறைகளில் தடம் பதித்து இந்தியாவின் முன்னணி நிறுவனமாக இருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், வெனிசுலாவில் இருந்து இந்தியாவிற்கு நேரடியாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய, அமெரிக்கா பொது உரிமம் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெனிசுலாவை கைப்பற்றும் வரை, அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்திருந்தது. ஆனால், அந்நாட்டு அதிபரை கைப்பற்றி, வெனிசுலாவை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்த அமெரிக்கா, அந்நாட்டு எரிசக்தித் துறை மீதான தடைகளை தளர்த்தியுள்ளது.
இந்த நிலையில் தான், வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த மாதம் விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இடைத்தரகு நிறுவனங்கள் மூலம் இந்த மாதம் 20 லட்சம் பீப்பாய் வெனிசுலா கச்சா எண்ணெயை இந்நிறுவனம் வாங்கியுள்ளது. ஆனால், தற்போது நேரடியாக இறக்குமதி செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இதனால், ரஷ்யாவைத் தொடர்ந்து, வெனிசுலாவில் இருந்து குறைந்த விலையில் எண்ணெய் கிடைக்க இந்தியாவிற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் இந்தியாவிற்கான வரியை ட்ரம்ப் குறைத்த நிலையில், தற்போது இந்த அனுமதி கிடைத்துள்ளது. இது இந்தியாவிற்கு சாதகமாகவே கருதப்படுகிறது.























