America : இந்தியாவில் புதைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல் 58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மறுஅடக்கம் செய்யப்படுகிறது. 


இந்தியாவில் அடக்கம்


அமெரிக்க ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி வகித்தவர் ஹாரி கிளீன்பெக் பிக்கெட். இவர் கடந்த 1965ம் ஆண்டு இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள சுற்றுலா நகரமான டார்ஜிலிங்குக்கு வந்திருந்தார். அப்போது, இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்துள்ளார். இதனால் அவரது உடல் அங்குள்ள சிங்டம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 


ஆனால், அவரது உடலை அமெரிக்காவுக்கு கொண்டு சென்று மறு அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படியே, கெட்டினின் உடல் பாகங்களை தோண்டி எடுத்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்று அங்கு மறு அடக்கம் செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தினர் வைத்த கோரிக்கைக்கு அமெரிக்க அரசும், இந்திய அரசும் இணைந்து பல நாட்கள் நடவடிக்கை எடுத்து வந்தது. 


58 ஆண்டுகளுக்கு பிறகு...


இதனை அடுத்து, டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஒரு தனியார் இறுதிச்சடங்கு சேவை நிறுவனத்தின் உதவியுடன், அமெரிக்க முன்னாள் ராணுவ அதிகாரி பிக்கெட்டின் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. முன்னாள் ராணுவ அதிகாரி பிக்கெட்டின் உடலை அமெரிக்காவுக்கு கொண்டு சென்று மறுஅடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


அதன்படி, மேற்க வங்கம் டார்ஜிலிங்கில் இருந்து அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு, இம்மாதம் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. அமெரிக்கா ஆர்லிங்டன் தேசிய கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட உள்ளது.  சுமார் 58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல் அவரது தாயகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. இதனை அமெரிக்க தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உறுதி செய்தது. 


நன்றி


இது குறித்து அமெரிக்க துணைத்தூதர் மெலிண்டா பாவெக் கூறுகையில், ”முன்னாள் மேஜர் ஜெனரல் பிக்கெட்டின் உடலை அவரது குடும்பத்தினரிடம் கொண்டு சேர்ப்பதில் உதவுவது, எங்களுக்கு பெருமையும், கவரவமும் அளிக்கும் விஷயமாகும்.  இதற்கு உதவி செய்த இந்திய அரசுக்கும், டார்ஜிலிங் மாவட்ட மாஜிஸ்திரேட்டுக்கும், மேற்க வங்க அரசுக்கும்” நன்றி என்று தெரிவித்துள்ளார்.


யார் இந்த பிக்கெட்?


அமெரிக்க ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி வகித்தவர் ஹாரி கிளீன்பெக் பிக்கெட். 1913ஆம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் இணைந்தார். இதனால் அந்நாட்டின் புகழ்பெற்ற ராணுவ அதிகாரிகளில் ஒருவராக பிக்கெட் திகழ்ந்தார். முதல் மற்றும் இரண்டு உலக போர்களிலும் பங்கேற்ற பெருமைக்குரியவர் பிக்கெட். 


இந்நிலையில், இந்தியாவில் புதைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ அதிகாரியின் உடல் 58 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மறுஅடக்கம் செய்யப்படுவது பெரும் வியப்பை தருகிறது.