பாகிஸ்தானில் உள்ள கோவிலுக்குச் சென்று வர இந்தியப் பயணிகளுக்கு பாகிஸ்தான் 100 சிறப்பு விசாக்களை வழங்கி வருகிறது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஷிவ் அவதாரி சத்குரு சாந்த் ஷதரம் சாஹிப்பிற்கு கோயில் உள்ளது. அவரின் 314வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள இந்திய யாத்ரீகர்களுக்கு 100 விசாக்களை வழங்கியுள்ளதாக பாகிஸ்தான் திங்கள்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


பாகிஸ்தான் உயர் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய இந்து யாத்ரீகர்கள் குழு ஒன்று நவம்பர் 22 முதல் டிசம்பர் 3 வரை ஷதானி தர்பார் ஹயாத் பிடாஃபி என்கிற பகுதிக்கு வருகை தருவதாகத் தெரிகிறது. இதற்கிடையேதான் இந்த விசா அறிவிப்பு வெளியாகியுள்ளது.


பழமையான கோயில்:


ஷதானி தர்பார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான கோயிலாகும். இது உலகம் முழுவதிலுமிருந்து வரும் இந்து பக்தர்களின் புனித தலமாகும். இது 1708ல் லாகூரில் பிறந்த சாந்த் ஷாதரம் சாஹிப் என்பவரால் 1786ல் நிறுவப்பட்டது.


1974ம் ஆண்டில் பாகிஸ்தான் இந்தியா இடையே ஒப்பந்தமான உடன்படிக்கையின் கீழ், மத வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வதற்கான பாகிஸ்தான்-இந்தியா நெறிமுறையின் அடிப்படையில் இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான சீக்கிய மற்றும் இந்து யாத்ரீகர்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மத விழாக்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பாகிஸ்தானுக்கு வருகிறார்கள்.




பாகிஸ்தான் உயர் கமிஷன் வழங்கிய விசாக்கள், மற்ற நாடுகளில் இருந்து இந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் இந்து மற்றும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களுக்கு கூடுதலாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக மற்றொரு செய்தியில் பாகிஸ்தானில் இம்ரான் கானுக்கும் அவரது கட்சியினருக்கும் இடையே தொடர்ந்து முட்டல் மோதல் நிலவி வருகிறது.


பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சித் தலைவரும், பாகிஸ்தான் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.


 


இம்ரான் கானின் உதவியாளர் ஷாபாஸ் கில் அண்மையில் தேச விரோத வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷாபாஸ் கில்லுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கபட்டார் என இம்ரான் கான் கட்சி குற்றம் சுமத்தியது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.


இந்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் தலைமையில் கடந்த சனிக்கிழமை பேரணி நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில், அந்நாட்டின் பெண் நீதிபதி, போலீஸ் அதிகாரிகள், தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக இம்ரான் கான் எச்சரிக்கை விடுத்தார். 


பேரணியில் பேசும்போது, உயர் நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி ஜெபா சவுத்ரியை மிரட்டியதாக இஸ்லாமாபாத் சதார் மாஜிஸ்திரேட் அலி ஜாவேத் அளித்த புகாரின் பேரில் பிடிஐ தலைவர் இம்ரான் கானுக்கு எதிராக பயங்கரவாத வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கைதாகும் சூழல் ஏற்பட்டது. நீதிபதியை மிரட்டிய வழக்கில் இம்ரான் கானுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி இஸ்லமாபாத் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. செப்டம்பர் 1 வரை இடைக்கால தடை உள்ளது. அதற்காக இம்ரான் கான் ரூ.1 லட்சத்துக்கான பிரமாணப் பத்திரமும் கொடுத்துள்ளார்