நீட் தேர்வு முறைகேட்டை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கிடையே, மும்பையில் போலீஸ் வாகனத்தின் முன் நின்று அதை வழிமறித்த இளம்பெண்ணின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த இளம்பெண் யார் என்ற கேள்வி இணையத்தில் அதிகம் தேடப்பட்ட நிலையில், தற்போது அவரது பின்னணி வெளியாகியுள்ளது.

Continues below advertisement

போலீஸ் வாகனத்தை வழிமறித்த ரியா அஹிர்

வைரலான அந்த இளம்பெண் ரியா அஹிர். 27 வயதான அவர், மும்பையைச் சேர்ந்த மாடல், நடிகை மற்றும் தொழில்முனைவோர் ஆவார். 'ரியாசத்' (Riyasat) என்ற ஆடை பிராண்டுடனும் அவர் தொடர்புடையவர். போராட்டத்திற்கு முன்பு ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு துறையில் மட்டுமே அறியப்பட்ட ரியா, இந்த ஒரு சம்பவத்தால் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டத்தின் போது, சில போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். அப்போது அந்த வாகனத்தின் முன் நின்று, கைது செய்யப்பட்டவர்களை ஏன் அழைத்துச் செல்கிறீர்கள் என்று போலீசாரிடம் ரியா அஹிர் கேள்வி எழுப்பினார். அந்தக் காட்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

Continues below advertisement

தனது செயல் குறித்து ரியா அஹிர்

பின்னர் NDTV-க்கு அளித்த பேட்டியில், "நான் நீட் தேர்வு எழுதிய மாணவி அல்ல. ஆனால் மாணவர்களுக்காக குரல் கொடுப்பது அவசியம் என்று நினைத்தேன். டெல்லியில் மாணவர்கள் மீது நடந்த போலீஸ் நடவடிக்கை தவறானது. போலீசார் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால், குடிமக்களாகிய நாம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தோன்றியது" என்று ரியா அஹிர் தெரிவித்துள்ளார். மேலும், போலீஸ் வாகனத்தை தடுக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடவில்லை; அங்கு நடந்த சம்பவத்தை பார்த்த பிறகே உணர்ச்சிவசப்பட்டு அந்த முடிவை எடுத்ததாகவும் அவர் விளக்கியுள்ளார்.

ரியா அஹிர் போலீஸ் வாகனத்தை வழிமறித்த அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. சிலர் அவரது துணிச்சலை பாராட்டி ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், மற்றொருபுறம் அவரது செயல் குறித்து சட்டம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான விவாதங்களும் இணையத்தில் எழுந்துள்ளன. இருப்பினும், நீட் தேர்வு முறைகேடு தொடர்பான போராட்டங்களில் அதிகம் பேசப்பட்ட முகங்களில் ஒருவராக ரியா அஹிர் மாறியுள்ளார்.