விழுப்புரம் : வளவனூரில் நான்கு இளைஞர்கள் இணைந்து தெருவில் சுற்றி திரியும் நாய்களை இரவு நேரத்தில் தடியால் அடித்து கொன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


விழுப்புரம் அருகேயுள்ள வளவனூர் பஞ்சாயத்து போர்டு தெருவில் சதீஷ் என்பவர் அப்பகுதியில் உள்ள தெரு நாய்களுக்கு உணவளித்து பாதுகாத்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஐய்யனார், சுரேந்தர் ஆகிய இரு இளைஞர்கள் தனது நண்பர்களுடன் இணைந்து இரவு நேரங்களில் இரு சக்கரவாகனங்களில் சுற்றி திரியும் போது அப்பகுதியிலுள்ள நாய்களை பயமுறுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தில் வரும்போதெல்லாம் செப்பல் அணிந்த காலால் சாலையில் தேய்த்து கொண்டே சென்றுள்ளனர். இதனால் அங்கிருக்ககூடிய தெருநாய்கள் அந்த இளைஞர்களை கண்டால் மட்டும் குரைத்து கொண்டே துரத்தி சென்றுள்ளது.


இந்த செயலை தினந்தோறும் அப்பகுதி இளைஞர்கள் செய்து வந்ததால் அங்கிருக்க கூடிய தெரு நாய்கள் இளைஞர்களை கடிக்க துரத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இரவு நேரத்தில் தடியை எடுத்து வந்து தெரு நாயை சராமாரியாக அடித்தே கொன்றுள்ளனர். இது போன்று அப்பகுதியில் சுற்றி திரிந்த ஆறு நாய்களை அந்த இளைஞர்கள் தடியால் அடித்து கொன்றுள்ளனர். இளைஞர்கள் தெரு நாய்களை தடியால் அடித்து கொல்லும் சிசிடிவி காட்சிகள் சமூல வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வாயில்லாத தெருவில் இரவு நேர பாதுகாவலர்களாக சுற்றி வந்த நாய்களை இளைஞர்கள் அடித்து கொன்ற சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்களும் செல்ல பிராணிகள் வளர்பவர்களும் தங்களது கண்டனத்தை தெரிவித்து இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.