விழுப்புரம் : 2024-25ஆம் ஆண்டிற்கான 'கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக்கோழிப்பண்ணை அலகுகள் நிறுவ 50% மானியம் வழங்கும் திட்டம்" விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.


விழுப்புரம் மாவட்டத்தில் 3 முதல் 6 தொழில் முனைவோர்/பயனாளிகள் தேர்ந்தெடுத்திட வளர்ப்பில் ஆர்வமுள்ள விருப்பமுள்ள விவசாயிகள் இத்திட்டத்திற்கு கோழி விண்ணப்பிக்கலாம். 250 கோழிகளை வளர்க்கக்கூடிய கோழிக்கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். இந்தப் பகுதி மனித குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும்.


மேலும், பயனாளி அந்த கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். விதவைகள், ஆதரவற்றோர், திருநங்ககைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் 30% தாழ்த்தப்பட்ட / பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இதற்குமுன் 2022-23 (ம) 20232024ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளோ அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருக்கக் கூடாது.


நாட்டுக்கோழி வளர்ப்புப் பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு. உபகரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு), மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50% மானியம் (ரூ. 1,56,875/-) மாநில அரசால் வழங்கப்படும்.


இத்திட்டத்தில் மீதமுள்ள 50% பங்களிப்பை வங்கி மூலமாகவோ (அ) தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஒசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும். கட்டுமானப்பணிகள், தீவனம் (ம) உபகரணங்கள் வாங்குதல் போன்ற அனைத்து செயல்முறைகளும் பயனாளியால் செய்யப்பட வேண்டும்.


மேலும், விண்ணப்பிக்கும் பயனாளிகள் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை நகல், பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா/அடங்கல் நகல். 50% தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு விவரம் / வங்கி கடன் ஒப்புதல் விவரம்) 3 வருடத்திற்கு பண்ணையை பராமரிப்பதற்கான உறுதிமொழி, 2022-23 (ம) 2023-24ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்பதற்கான சான்றிதழ் அளித்தல் வேண்டும்.


எனவே, இத்திட்டத்தில் சேர விருப்பமுள்ள பயனாளிகள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனையை / கால்நடை மருந்தகத்தை அணுகி விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் வரும் 06.08.2024ந் தேதிக்குள் அதே கால்நடை மருத்துவமனையில் / கால்நடை மருந்தகத்தில் ஒப்படைத்திடுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.