டன் கணக்கில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள் - எப்படி ஆச்சு?
புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், மற்றும் நகராட்சி குப்பைகளை கொட்டுவதாலும், ஏரியில் மீன்கள் செத்து மிதப்பாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

விழுப்புரம் அருகேயுள்ள சாலாமேட்டில் அமைந்துள்ள பொன்னேரி அப்பகுதி மக்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விழுப்புரம் நகர பகுதிகளை சுற்றியுள்ள பொதுப்பணி துறை மூலம் பராமரிக்கப்படும் ஏரிகளை தனி நபர்கள் குத்தகைக்கு எடுத்து மீன் வளர்த்து வருகின்றனர். இந்த ஏரி குளங்களில் கெண்டை, ஜீலேபி மீன்கள் வளர்த்து விற்பனை செய்கின்றனர். சாலாமேடு பகுதி பொன்னேரியை சேர்ந்த சுரேஷ் என்பவர் குத்தகை எடுத்து மீன் வளர்த்து வருகிறார்.
இந்த ஏரியில் கடந்த சில தினங்களாக பெய்த மழைநீர் மட்டுமின்றி, தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீரும் கலந்துள்ளது. ஏரியில் ரசாயன கழிவு நீர் கலப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறையில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ரசாயன கழிவு கலந்ததால், ஏரியில் நீர் கருப்பு நிறத்திலும், ஆங்காங்கே நுரை பொங்கி நிற்கிறது.
இந்நிலையில், கடந்த இரு தினங்களாக பொன்னேரியில் மீன்கள் கொத்து, கொத்தாக செத்து மிதக்கிறது. இறந்த மீன்களை அப்புறப்படுத்தாததால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏரியில் ரசாயன கழிவு கலந்ததால், ரூ. 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் இறந்துள்ளதாக, குத்தகைக்கு எடுத்தவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.























