"மாதம் தோறும் உதவித்தொகை வேண்டுமா? விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!"
விழுப்புரம் : படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் !

விழுப்புரம் : படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.
உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 01.01.2026 முதல் துவங்கும் காலாண்டிற்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்துவகை மாற்றுத்திறனாளி இளைஞர்களிடமிருந்து, வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் : 31.12.2025 அன்றைய நிலையில், பத்தாம் வகுப்பு தோல்வி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி, +2 தேர்ச்சி மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலுகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, ஐந்தாண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்/இளைஞிகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டிற்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு மொத்த வருமானம் ரூ,72000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும், (மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு வருமான வரம்பிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது). தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 31.12.2025 அன்றைய நிலையில் 45 வயதிற்கு மிகாமலும், இதர இனத்தை சார்ந்தவர்கள் 40 வயதிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளி பதிவுதாரர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை. பொறியியல், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம் போன்ற தொழில் பட்டப் படிப்புகள் முடித்திருந்தால் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினை ஆதாரமாக காண்பித்து, விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை அனைத்து வேலை நாட்களிலும் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். வேலைவாய்ப்புத் துறையின் இணைய தளத்திலிருந்தும் விண்ணப்பத்தினை https://employmentexchange.tn.gov.in/பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த பூர்த்தி செய்யப்பட்ட உதவித்தொகை விண்ணப்பங்களை பிப்ரவரி 28-ம் தேதிவரை அனைத்து அலுவலக வேலை நாட்களிலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் விழுப்புரத்தில் இயங்கும் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப் பிரிவில் அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்துடன் நேரில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.





















