கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடைவிடாமல் 4-வது நாளாக அடைமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மதியம் 1 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மழை ஓய்ந்து லேசாக வெயில் தலைகாட்ட தொடங்கியது. கடலூரில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் கடலூரில் 17.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதுபற்றி அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள், வீடுகளில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டவர்களை படகு மூலம் மீட்டு, அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர். இதுவரை கடலூர் மாவட்டத்தில் 22 முகாம்களில் 3 ஆயிரம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கனமழையால் கடலூர், பண்ருட்டி,காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள 7 கூரை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அந்த வீடுகளில் வசித்தவர்கள் ஏற்கனவே முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கபட்டு உள்ளது கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.