திடீரென வந்த நெஞ்சுவலி; பயணிகள் உயிரை காப்பாற்றிய டிரைவர்
புதுச்சேரியில் இருந்து மாஹே சென்ற அரசு பேருந்தினை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் சாலை ஓரமாக நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றினார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து மாஹே சென்ற அரசு பேருந்தினை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு திடீரென தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் சாலை ஓரமாக நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், ஓட்டுநரின் சிகிச்சைக்காக தனது பயணத்தை ரத்து செய்து அவருடன் மருத்துவமனையில் தங்கியிருந்த பயணியின் செயல் பொதுமக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது.
பி ஆர் டி சி பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வந்த நெஞ்சுவலி; சாலையோரமாக பேருந்தை நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம்
புதுச்சேரியில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை மாஹேவுக்கு பிஆர்டிசி அரசு பேருந்து 49 பயணிகளை ஏற்றிச் சென்றது. இந்த பேருந்தை ஆறுமுகம் ஓட்டிச் சென்றார். சனிக்கிழமை அதிகாலை மலப்புரம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, டிரைவருக்கு ஆறுமுகத்திற்க்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது.
உடனடியாக டிரைவர் பயணிகளின் உயிரை கருத்தில் கொண்டு, பேருந்தை சாலையோரமாக நிறுத்தினார். இதனால் பயணிகள் எந்த பாதிப்பும் இன்றி தப்பினர். மாற்று ஓட்டுநர் குணசேகரன், நடத்துநர் ஞானவேல் ஆகியோர் மலப்புரம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஓட்டுநர் ஆறுமுகத்தை சேர்த்தனர்.
அங்கு ஓட்டுநர் ஆறுமுகத்திற்க்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மாற்று ஓட்டுநர் பயணிகளை மாஹே அழைத்து சென்றார். தகவலறிந்த PRTC பிஆர்டிசி உதவி மேலாளர் குழந்தைவேல், மேலாண் இயக்குநர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, உடனடியாக ஆறுமுகத்தின் சிகிச்சைக்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு சிவக்குமார் உத்தரவிட்டார். உடனே குழந்தைவேல், மருத்துவமனை நிர்வாகத்தை தொடர்புகொண்டு உரிய சிகிச்சை அளிக்கும்படியும், சிகிச்சைக்கான தொகையை அனுப்புவதாகவும் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட மருத்துவமனை நிர்வாகம் ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு சிகிச்சை அளித்தது.
அரசு பேருந்தில் பயணித்த பயணியின் நெகிழ்ச்சி செயல்
அந்த பேருந்தில் நெய்வேலியில் இருந்து கோழிக்கோடு செல்லவதற்காக பயணம் செய்த தேவதாஸ் என்பவர் ஓட்டுநர் ஆறுமுகத்துக்கு உதவியாக தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் தங்கி உதவியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பேருந்தில் நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையோரமாக பேருந்து நிறுத்தி பயணிகள் உயிரை காப்பாற்றிய சம்பவம் தற்போது பரபரப்பாகி உள்ளது.