புதுச்சேரி: திருமணத்தில் மரக்கன்று, புத்தகம், பூச்செடிகள், தேங்காய், பழம், வைத்து தாம்பூலம் கொடுத்து கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் திருமண வரவேற்பில் தாம்பூலப் பையில் குவார்ட்டர் சரக்கு பாட்டில் போட்டுக்கொடுத்த திருமண வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது.


 


பொதுவாக திருமண வரவேற்பிற்கு வரும் உறவினர்கள் மற்றும் விருந்தாளிகளுக்கு திருமணம் முடிந்தவுடன் உணவு அருந்திவிட்டு செல்லும்போது தாம்பூலம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த தாம்பூல பையில் சாத்துக்குடி, மாம்பழம், லட்டு, புத்தகம், மரக்கன்றுகள், பூச்செடிகள், அப்படி இல்லை என்றால் தேங்காய் போட்டு தாம்பூல பை கொடுப்பார்கள். ஆனால் புதுச்சேரியில் 28-ந்தேதி சென்னை சேர்ந்த நிர்மல் என்பவருக்கும் புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்த ஆரதி என்ற மணமகளுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நகரப் பகுதியில் உள்ள மகாலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் சென்னை மற்றும் புதுச்சேரி சேர்ந்த மணமக்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 


இந்த நிலையில் திருமண வரவேற்பில் கலந்து கொண்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் மணமகன் வழங்கிய தாம்பூல பையில் தேங்காய், பழம் வெத்தலை பாக்கு உடன் குவாட்டர் சரக்கு பாட்டிலையும் சேர்த்து கொடுத்து திருமணத்திற்கு வந்த விருந்தாளிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால் சரக்கு பாட்டில் தாம்பூல பையை சிலபேர் இரண்டு கொடுங்கள் என்று கேட்டுக் வாங்கியும் சில பேர் சரக்கு பாட்டில் வேண்டாம் வெறும் தாம்பூல பையை மட்டும் கொடுங்கள் என்று வாங்கி சென்றனர்.


இந்த தாம்பூல பையில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் திருமணத்திற்கு வந்த குழந்தைகள் பெண்கள் உட்பட அனைவருமே இதை பெற்றுச் சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்களை குஷி படுத்தும் வகையில் திருமண வீட்டார் செய்த இந்த செயல் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும் புதுச்சேரியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வருபவர்கள் பெரும்பாலும் மது குடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள் அவர்களின் ஆசியை நிறைவேற்றவே இதை செய்ததாக மணமக்களின் நண்பர்கள் கூறினர்.


 


திருமண தாம்பூலத்தில் மதுபானம் வழங்கிய விவகாரத்தில் அபராதம் விதிப்பு :- 


புதுச்சேரி காந்திவீதியில் உள்ள திருமணத்தில் தாம்பூல பையில் மதுபானம் கொடுத்த வீடியோ வைரலானது. திருமணத்தில் தாம்பூல பையில் மதுபானம் கொடுத்த விவகாரத்தில் மதுபானம் விற்பனை செய்த கடை உரிமையாளர், திருமண மண்டப உரிமையாளர், மணமகள் உறவினர் ராஜ்குமார் ஆகியோருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலால் துறை துணை ஆணையர் குமரன் தெரிவித்துள்ளார்.