சரிந்தது சாம்ராஜ்யம்.... பொன்முடியின் அமைச்சர் பதவி பறிப்பு; தொண்டர் தீ குளிக்க முயற்சி
திமுக நிர்வாகி குணா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாக்யராஜ் ஆகியோர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.

விழுப்புரம்: பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் திமுகவினர் இருவர் தீக்குளிக்க முயற்சி, மீண்டும் அமைச்சர் பதவி வழங்க கோரி முழக்கம்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரான பொன்முடி உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த நிலையில் பின்னர் வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் பொன்முடி பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்த நிலையில் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று பொன்முடி வகித்து வந்த வனத்துறை ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்ட திருவெண்ணைநல்லூர் கடைவீதியில பொன்முடியின் சொந்த ஊரான தி.அடையார் கிராமத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி குணா மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாக்யராஜ் ஆகியோர் உடலில் மண்ணெண்ண ஊற்றி தீக்குளிக்க முயன்றனர் மேலும் இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரிந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இருவரையும் காப்பாற்றியதோடு இரு சக்கர வாகனத்தின் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இந்நிலையில் கடைவீதியில் திரண்ட திமுகவினர் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என முழுக்கமிட்டனர். தொடர்ந்து திருவெண்னை நல்லூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பாக்யராஜ் என்பவர் மயக்கமடைந்த நிலையில் அவரை மீட்டு அவசர உறுதி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பொன்முடியின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து திமுகவினர் தீ குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சரவை மாற்றம்
தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.மனோ தங்கராஜ் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தவிர அமைச்சர்கள் எஸ்.எஸ்.சிவசங்கர், முத்துசாமி மற்றும் ராஜகண்ணப்பன் ஆகியோருக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின் பேரில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் வனத்துறை மற்றும் காதித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோரின் ராஜினாமா கடிதம்ஏற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எஸ்.சிவசங்கர், மின்சாரத்துறையை கூடுதலாக கவனித்துக் கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரான எஸ்.முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையை கூடுதலாக கவனித்துக் கொள்வார். பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வனத்துறை மற்றும் காதித்துறைக்கான கூடுதல் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார் எனவும் ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பு கூறப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள மனோ தங்கராஜின் பதவியேற்பு, நாளை (ஏப்ரல்28) மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்ச்சை பேச்சுக்களால் பதவி இழந்த பொன்முடி
தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 2021 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்து, பொன்முடி மீதான சர்ச்சைகள் அணிவகுத்தன.
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத்தை விமர்சித்தது, அரசு நிகழ்ச்சிகளில் பொதுமக்களை விமர்சித்தது எனத் தொடர்ந்து பொன்முடியின் பேச்சு விமர்சனத்துக்குள்ளானது.
தி.மு.க பொதுக்குழு கூட்டத்திலேயே இதுதொடர்பாக தனது அதிருப்தியை முதலமைச்சர் ஸ்டாலின் வெளிக்காட்டினார். இந்தநிலையில், கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்றார்.
அப்போது, சைவம், வைணவம் ஆகிய மதங்களை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிட்டு அவர் பேசினார்.
பொன்முடியின் பேச்சு இணையத்தில் பரவியது. இதையடுத்து, பொன்முடியை தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது




















