கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த திருவதிகை அசோக் நகரை சேர்ந்தவர் வினோத்பாபு (35). இவர் நெய்வேலியில் இயங்கி வரும் ஆகாஷ் நீட் பயிற்சி எனப்படும் தனியார் நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வந்தார்.

 

இந்த நிலையில் இவருக்கு பணி சம்பந்தமாக நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட அவர் நேற்று காலை தனிமையில் இருந்த போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த நிலையில் தற்கொலைக்கு தூண்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இறந்தவரின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு பண்ருட்டி-கும்பகோணம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுக்க தாமதமானதால் மீண்டும் மாலை 5 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அப்போது சாலை மறியல் ஈடுபட்டவர்கள் தற்கொலைக்கு தூண்டுதலாக இருந்த நெய்வேலி ஆகாஷ் நீட் பயிற்சி நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனவும் கோஷம் எழுப்பினர்.

 



 

 

பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அரசு மருத்துவமனை முன்பு போலீஸ் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் பணிபுரிந்த இடத்தில் மேலாளர் அதிக அளவில் பணி சுமை கொடுத்ததும், சக ஊழியர்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் திட்டியதாலும்  மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், மேலும் மாணவி ஒருவரை அட்மிஷன் செய்ததில் பணம் பாக்கி இருப்பதாக கூறி வினோத்பாபுவை மேலாளர் கடுமையாக திட்டி இருப்பதாக கைப்பட கடிதம் மனைவிக்கு எழுதியிருக்கிறார். அதைத் தொடர்ந்து பண்ருட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபிபுல்லா தலைமையில் போலீசார் விசாரணை செய்து நெய்வேலி ஆகாஷ் நீட் பயிற்சி நிறுவன மேலாளர் குறிஞ்சிப்பாடி நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த தம்புசாமி மகன் குழந்தைவேல் வயது 38 என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.