அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
30 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம்
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில், அதில் 30 பேர் அரசு தரப்புக்கு எதிராக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.
ஜூன் 4ம் தேதி விசாரணை
நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சதானந்தன், கோபிநாத், ஜெயச்சந்திரன் ஆகியோர் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆஜராகவில்லை. அதற்கான காரணம் குறித்து தி.மு.க., வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர். மேலும், அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இவ்வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்காக 2 வாரம் கால அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட மாவட்ட நீதிபதி மணிமொழி, இந்த மனு மீதான விசாரணையை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இறுதி கட்டத்தை எட்டிய செம்மண் குவாரி வழக்கு
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் அமைச்சர் பொன்முடி அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது வரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இருப்பினும் அரசு தரப்பு வழக்கறிஞரின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.