விழுப்புரம்: விழுப்புரத்தில் திமுக கூட்டணியில் யார் நின்றாலும் வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும், 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தனக்கே கூட இடம்  இல்லாமல் போகலாம் அமைச்சர் பொன்முடி பேசியிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

 

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் மாவட்ட பொறுப்பாளர் கெளதமசிகாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், அன்னியூர் சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

அப்போது மேடையில் பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடி


வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் 200 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெற வேண்டும் எனவும் 8 முறை தேர்தலில் நின்று 6 முறை வெற்றி பெற்றவன் நான், அந்த அனுபவத்தில் கூறுகிறேன். நிர்வாகிகள் மனக்கசப்பை தவிர்த்து வீடு வீடாக சென்று வாக்காளர்களை கட்சியில் இணைக்க செயல்பட வேண்டும் என கூறினார்.

 

அதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் பொன்முடி, வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலில் தனக்கே கூட இடம்  இல்லாமலும், போகலாம், யார் வேண்டுமென்றாலும்  நிறுத்தபட்டாலும் யார் எதிர்த்து நின்றாலும் திமுக தான் வெற்றி பெறும் என்று நிர்வாகிகள் செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார். சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்திலுள்ள 7 தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் போட்டியிடுவார்கள் என்பதை யார் நிறுத்தினாலும் வெற்றி பெற செய்யவேண்டுமென அறிவுறுத்தினார்.

 

மழை பாதிப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த  நடவடிக்கையை நாடே பாராட்டுவதாகவும், மழையை வைத்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எதை எதையோ பேசி கொண்டிருப்பதாகவும், இதில் அரசியல் செய்து வாக்குகளை பெற வேண்டும் என அவர் செயல்பட்டு கொண்டிருப்பதாக கூறினார். நடைபெற உள்ள 2026  சட்டமன்ற தேர்தலில் இளைஞர்களுக்கு வழி விட்டு செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

 

அமைச்சர் பொன்முடி தனக்கே இடமில்லாமல் போகலாம் என கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் மூத்த நிர்வாகிகள் ஓரம்கட்டப்படுவது உறுதியாகியுள்ளது.